புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தடம் புரளாமல் வாழ்பவன் தமிழன்- பாரதிராஜா
பெங்களூர்: புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தடம் புரளாமல் வாழ்பவன் தமிழன் என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.
கர்நாடக தமிழர்கள் கூட்டமைப்பின் 3-ம் ஆண்டு விழாவையொட்டி பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினவிழா பெங்களூரு அல்சூரில் நேற்று மாலை நடைபெற்றது.
விழாவை பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார்.

பின்னர், மறைந்த கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலின் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பாரதிராஜா, வழக்கம்போல் தனது பாணியில் ‘என் இனிய தமிழ் மக்களே' என கூறி ஆரம்பித்தவர், தொடர்ந்து, "உலக தமிழர்கள் அனைவருக்கும் பிரிவினை என்பது கிடையாது. அனைவரும் தமிழர்கள் தான். இதனால் தான் நான், ‘என் இனிய தமிழ் மக்களே' என கூறினேன். பழமையான மொழிகளிலேயே மூத்த மொழி தமிழ் தான் என ஆய்வு கூறுகிறது.
கர்நாடகத்திற்கும், எனக்கும் சம்பந்தம் உள்ளது. மறைந்த இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் நான் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். பெங்களூரு, மைசூரு, கொள்ளேகால், பெலக்கவாடி ஆகிய பகுதிகளுக்கு நான் அதிகமாக சென்று வந்துள்ளேன். புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தடம் புரளாமல் வாழ்பவன் தமிழன்.
இடம் பெயர்ந்தாலும், புலம் பெயர்ந்தாலும் வாழ்ந்த பூமிக்கும், வாழ்கிற பூமிக்கும் பெருமை சேர்ப்பவன் தமிழன். திரையுலகிற்கு நான் வந்ததை பெருமையாக கருதுகிறேன்.
உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் யாரும் ஊறு விளைவித்தால் அதை எதிர்த்து தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மொழி, இனத்தை பாதுகாப்பது பெற்ற தாய், தந்தையை பாதுகாப்பது போன்றது. மொழிக்கு வழங்கும் மரியாதை, பெற்ற தாய்க்கு கொடுக்கும் மரியாதை.
தமிழனின் பாரம்பரிய விழா பொங்கல். தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடந்து வந்தது. தற்போது ஜல்லிக்கட்டுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்," என்றார்.


Click it and Unblock the Notifications











