மகனை காண ஓடோடி வந்த பாரதிராஜா.. அப்பாவை இப்படி தவிக்க விட்டுட்டியே மனோஜ்!
சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோஜ் இன்று மாலை மாரடைப்பால் காலமானார். இவரது மரண செய்தி அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா மகன் இறந்த செய்தி அறிந்து சோகம் தோய்ந்த முகத்துடன் மனோஜின் முகத்தை காண காரில் பயணித்து வரும் வீடியோ வெளியாகியிருக்கிறது.
தாஜ்மஹால் படத்தின் மூலம் மகனை நடிகனாக்கி அழகு பார்த்தவர் பாரதிராஜா. அதைத்தொடர்ந்து ஈரநிலம், அன்னக்கொடி படங்களில் மண்வாசனை வீச நடிக்க வைத்திருநதார். கடல் பூக்களில் கடலோர கவிதை போன்ற ஒரு முகபாவனையை வரவைத்து தனது மகனும் இந்த தமிழ் சினிமாவை ஆழ்வான் என்ற கனவுக்கோட்டையை கட்டினார் பாரதிராஜா. மனோஜ் நடித்த படங்களுக்கு வரவேற்பு இருந்தாலும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. பின்னர், மனோஜூம் நடிப்புக்கு விடை கொடுத்து இயக்குநராக முயற்சி செய்தார்.

நடிக்க விருப்பமில்லை: சமீபத்தில் மனோஜ் அளித்த பேட்டியில் அய்யோ என்னை விடுங்க எனக்கு நடிப்பு வரவில்லை என அப்பாவிடம் சண்டை போட்டிருக்கேன். ஆனாலும் அப்பா கேட்கவே இல்லை. நானும் முரண்டு பிடித்து ஒரு நாள் படப்பிடிப்பில் இருந்து வீட்டிற்கு கிளம்பிவிட்டேன். பின்னர், அவரது நெருங்கிய நண்பர் வந்து பேசி என்னை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார். படப்பிடிப்பில் என் மீது கோபப்படுவார் என்று நினைத்திருந்தேன். அமைதியாக இருந்தார். எதுவும் கூறவில்லை. பிறகு படத்தில் நடித்தேன் என மனோஜ் தெரிவித்தார்.
திருமணம்: நடிகர் மனோஜ் தனது நீண்ட நாள் தோழியான நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமே ஒரு வியப்பான விசயம் தான் என மனோஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். நந்தனாவை காதலிக்கிறேன் இந்த பெண்ணைத்தான் பிடித்திருக்கிறது என்று சித்தப்பா, அம்மாகிட்ட சொல்லிட்டேன். ஆனால் அப்பாவிடம் சொல்ல தயக்கம். நந்தனாவை பத்தி அம்மா அப்பாகிட்ட சொன்னதும், என்னால் வரமுடியாது நீங்க முதலில் கேரளாவிற்கு சென்று பொண்ணை பாருங்க அப்புறம் பேசிக்கலாம் சொல்லிட்டாரு.
பொண்ணை பார்த்ததும் வீட்டில் இருந்த அனைவருக்கும் பிடித்துவிட்டது. ஆனால், அப்பாவால் அதை நம்பமுடியவில்லை. எனக்கு பொருத்தமான பொண்ணு, நந்தனாதான் சரியா இருப்பாங்க என்று கூறியதும் அப்பா செம ஹேப்பி ஆகிட்டதாக மனோஜ் தெரிவி்த்தார். அப்பா மகன்களுக்குள் எத்தனை முரண்கள் இருந்தாலும் மனோஜ் இயக்கிய திங்கள் படத்தில் பாரதிராஜாவை நடிக்க வைத்து அழகு பார்த்தார். மனோஜ் எப்போதும் இமயம் பாரதிராஜாவை குரு ஸ்தானத்தில் வைத்து பார்த்துக்கொண்டார். பல பேட்டிகளில் அவர் கொடுத்த வாழ்க்கை இது என்றும் பெருமையாக தெரிவித்திருக்கிறார்.

மரணம்: மகன் இறந்த செய்தி அறிந்து தந்தையாக பாரதிராஜா துடிதுடித்து போனார். யாருக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்க கூடாது என்று பிரபலங்கள் கண்ணீர் விட்டு அழுக ஆரம்பித்து விட்டனர். இசைஞானி இளையராஜா கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்டுள்ளார். மனோஜ் இறப்பு செய்தியறிந்த பாரதி ராஜா மகனை காண ஓடோடி வந்திருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில், சென்னை நீலாங்கரை வீட்டுக்கு மனோஜ் உடல் எடுத்து செல்லப்பட உள்ளது. சென்னையில் இறுதி சடங்கு என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் வீடு அருகே நீலாங்கரை கபாலீஸ்வரன் நகரில் பாரதிராஜா வீடு உள்ளது.


Click it and Unblock the Notifications











