Manoj Bharathiraja: கடைசியாக மனோஜை பார்க்க விடலையா? காரில் அமர்ந்தபடி கதறிய பாரதிராஜா.. என்ன நடந்தது?
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று முன்தினம் அதாவது மார்ச் 25ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் நேற்று அதாவது மார்ச் 26ஆம் தேதி மனோஜ் பாரதிராஜாவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் எரிக்கப்பட்டது. இந்நிலையில், இறுதிச் சடங்கின்போது பாரதிராஜா தனது மகனை பார்க்க அனுமதிக்க வில்லை எனக் கூறி கதறி அழுதுள்ளார். உண்மையில் என்ன நடந்தது என்பதை இங்கு பார்க்கலாம்.
மனோஜ் பாரதிராஜாவின் மறைவு திரைத்துறையினர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், ரசிகர்களையும் சோகத்தில் மூழ்கடித்தது. மனோஜ் தமிழ் சினிமாவில் பெறும் வெற்றிகளைக் குவித்த நடிகர் இல்லை என்றாலும், அவர் மீது ரசிகர்களுக்கு அளவில்லாத அன்பு இருந்ததை அவரது மறைவுக்குப் பின்னர், ரசிகர்கள் அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த விஷயங்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக அவர் நடித்த படங்களில் இடம் பெற்ற பாடல்களை பகிர்ந்து இரங்கல் தெரிவித்தனர்.
இப்படி இருக்கும்போது, மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு திரையுலகமே திரண்டு வந்து இரங்கல் தெரிவித்தது. மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி தெரிந்ததும், இளையராஜா தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். கமல்ஹாசன் இரங்கல் குறிப்பு வெளியிட்டார். இப்படி இருக்கும்போது, நேற்று அவரது உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. சூர்யா, சிவகுமார், பிரபு, விஜய், உள்ளிட்ட பலரும் மனோஜ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

பாரதிராஜா: 85 வயதான கவுண்டமணி மனோஜ் பாரதிராஜாவுக்கு தனது இறுதி மரியாதை செலுத்தினார். மனோஜ் பாரதிராஜா உடல் எரிக்கப்படும் வரை திரைப் பிரபலங்கள் தொடங்கி பலரும் பாரதிராஜா குடும்பத்தினருடன் இருந்தார்கள். மனோஜ் உடலுக்கு அவரது இரண்டு மகள்களுமே இறுதிச் சடங்குகளை செய்தனர். அவர்கள் இறுதிச் சடங்கை செய்த காட்சிகளை பார்த்த அனைவரும் கண்ணீர் சிந்தினர்.
இறுதிச் சடங்கு: இந்நிலையில் இறுதிச் சடங்கு, அதற்கு முன்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலம் என அனைத்திலும் பாரதிராஜாவால் கலந்து கொள்ளவே முடியவில்லை. வயது மூப்பு மற்றும் மகனை இழந்த துயரம் என பாரதிராஜா மொத்தமாக நிலைகுலைந்து விட்டார். இப்படி இருக்கும்போது இறுதிச் சடங்கு முடிந்ததும் பாரதிராஜாவை அவர் அமர்ந்திருந்த நாற்காலியோடு தூக்கிக் கொண்டுவந்து, அவரை காரில் அமர வைத்தார்கள்.

கடைசியாக: அப்போது அவர், தனது மகனை கடைசியாக பார்க்க முடியவில்லையே என கதறி அழுதார். அதாவது காரில் அமர்ந்திருந்த பாரதிராஜா, " என் மகனை கடைசியாக பார்க்கவிடலையே" என கதறி அழுதார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பாரதிராஜாவின் வயது மூப்பு குறித்து பலரும் வேதனைப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவரது மகன், மனோஜ் பாரதிராஜா மறைவு பலரையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மனோஜ் பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல படங்களின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு, திரைத்துறையினர் பாரதிராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வந்திருந்தார்கள்.


Click it and Unblock the Notifications











