பாரதிராஜா இறப்பு.. உடைந்து போய் வெளியே வந்த கவுண்டமணி.. கையை பிடித்து தேற்றிய ரஜினிகாந்த்
சென்னை: இயக்கநர் இமயம் பாரதிராஜா நேற்று தன்னுடைய 84வது வயதில் மூச்சை நிறுத்தினார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை வத்தலகுண்டு அருகே காட் ரோடு பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் நடக்கவிருக்கிறது. அதனையொட்டி ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. சூழல் இப்படி இருக்க நேற்று துக்க வீட்டில் கவுண்டமணியும், ரஜினிகாந்த்தும் சந்தித்துக்கொண்டார்கள். அப்போது நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் புதிய விதைகளை விதைத்தவர் பாரதிராஜா. ஒவ்வொரு படத்தையும் சாமானியனுக்காகவே சாமானியர்களின் கதை கொண்டே படைத்தார். அதன் காரணமாக தமிழ்நாட்டின் இமயம் ஆனார் அவர். 70களில் ஆரம்பித்த அவரது பயணம் 80களில் முழு வேகம் எடுத்து 90களில் கொஞ்சம் வேகம் குறைந்து 2000க்கு பின் நின்றுபோனது. இருப்பினும் அதற்கு பிறகு நடிப்பு பயணத்தை தொடங்கி அதிலும் முத்திரை பதித்தார்.

உயிரிழந்த பாரதிராஜா: சூழல் இப்படி இருக்க கடந்த வருடத்தில் அவரது மகன் மனோஜ் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவர் உயிர் போனதிலிருந்தே பாரதிராஜாவும் மன உளைச்சலுக்கு ஆளானார். கூடவே வயோதிகம் காரணமாக வரும் உடல்நல குறைவும் ஏற்பட்டது. மருத்துவமனை, வீடு என மாற்றி மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டாலும்; எந்த பலனும் இல்லாததால் நேற்று அதிகாலை உயிரிழந்துவிட்டார்.
சோகத்தில் திரையுலகம்: பாரதிராஜாவின் இறப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை மூன்று மணிக்கு வத்தலகுண்டு அருகே இருக்கும் காட் ரோடு பகுதியில் அமைந்திருக்கும் அவரின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது. தமிழ் சினிமாவில் முதல் மரியாதையை கொடுத்த இமயத்துக்கு மொத்த தமிழ்நாடும் இறுதி மரியாதை செலுத்தவிருக்கிறது.
ரஜினி, கவுண்டமணி: இதற்கிடையே அவர் உயிரிழந்ததை கேள்விப்பட்டு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். 87 வயதில் கவுண்டமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தனக்கு 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் வெளிச்சம் கொடுத்தவர் பாரதிராஜா என கூறினார். அதேபோல் ரஜினிகாந்த்தும் நேரில் சென்று தனது மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்தினார். தன்னை பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர் பாரதிராஜா. யாருக்கேனும் பிரச்னை என்றால் முதலில் குரல் கொடுப்பார். அவர் அனைவரது மனதிலும் எப்போதும் இருப்பார்" என கூறியிருந்தார்.
நெகிழ வைக்கும் வீடியோ: இந்நிலையில் பாரதிராஜாவுக்கு மரியாதை செலுத்திவிட்டு உடைந்துபோய் கவுண்டமணி வெளியே வந்தபோது ரஜினிகாந்த் உள்ளே சென்றார். அப்போது இரண்டு பேரும் சந்தித்துக்கொண்டார்கள். பார்த்தவுடனேயே மணியின் கைகளை பற்றிக்கொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் உடல்நலத்தை பார்த்துக்கொள்ளும்படியும் கூறி; சோகத்தில் இருந்த அவரை தேற்றவும் செய்தார். கவுண்டமணியும் தனது ஆறுதலை ரஜினிக்கு தெரிவித்தார். இப்படி பாரதிராஜாவின் இறப்பு பலருக்கும் தங்களது வீட்டு இறப்பாகவே பார்க்கிறார்கள். இப்படித்தான் பாரதிராஜா இறந்த பிறகும் வாழ தொடங்கியிருக்கிறார்.. இன்னும் வாழ்வார்.


Click it and Unblock the Notifications
