பாரதிராஜாவின் இன்ஷியல் அவரது அப்பாவுடைய பெயர் இல்லை.. அப்படியானால் யாருடைய பெயர்? இந்த கதை தெரியுமா?
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகை மொத்தமாக வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. வயது மூப்பு மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக ஜூன் 10ஆம் தேதி அவர் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவில் இருந்தே, மீண்டு வராத பாரதிராஜா, கடைசி வரை சோகத்திலேயே இருந்தார்.
இப்படி இருக்கையில், பாரதிராஜாவின் திரை வாழ்க்கை மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சுவாரசியமான தகவல்களை ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகிறார்கள். அந்த வகையில், பலரும் அறியாத ஒரு நெகிழ்ச்சியான உண்மை தகவல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இனிஷியல்: பொதுவாக எல்லோரும் தங்களது தந்தையின் பெயரின் முதல் எழுத்தைத்தான் (Initial) பெயருக்கு முன்னால் வைப்பதே வழக்கம். ஆனால், இயக்குநர் இமயம் பாரதிராஜா இதில் முற்றிலும் மாறுபட்டவர். அவரது பெயருக்கு முன்னால் இருக்கும் 'K' என்ற எழுத்து அவருடைய தந்தையின் பெயர் கிடையாது. பாரதிராஜா தனது தாய் கருத்தம்மாள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். அந்த பாசத்தின் வெளிப்பாடாக, தனது பெயருக்கு முன்னால் தந்தையின் பெயருக்குப் பதிலாக தாயின் பெயரையே இனிஷியலாக (K. பாரதிராஜா) பயன்படுத்தினார். இவரது அம்மாவின் பெயர் கருத்தம்மாள் என்றாலும், அவரை நெருங்கிய குடும்பத்தினர் மீனாட்சியம்மாள் என்றும் அழைப்பார்கள். அதேபோல், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அப்பாவின் பெயர் பெரிய மாயத்தேவர் என்பதே. தனது அம்மாவின் மீதான பாசத்தை தன் பெயரிலேயே சுமந்து திரிந்தவர் பாரதிராஜா.
தேசிய விருது பெற்ற 'கருத்தம்மா': தாயின் மீது கொண்ட பாசம் பெயரோடு மட்டும் நின்றுவிடவில்லை. பின்னாட்களில் தான் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுத்த பிறகு, தன் தாயின் பெயரிலேயே 'கருத்தம்மா' என்ற திரைப்படத்தையும் இயக்கினார். பெண் சிசுக்கொலைக்கு எதிராகப் பேசிய இத்திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மட்டுமின்றி தேசிய விருதையும் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.

தற்போது பாரதிராஜா நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும், அவர் தமிழ் சினிமாவிற்குச் செய்த பங்களிப்புகளும், தாயின் மீது அவர் காட்டிய இந்த நெகிழ்ச்சியான பாசமும் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்று விவரம் தெரிந்தவர்கள் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications