கமல்ஹாசன், ஶ்ரீதேவி, ரேவதி நடிக்க... பொன்னியின் செல்வனை நான் தான் இயக்க இருந்தேன்.. பாரதிராஜா தகவல்
சென்னை: பொன்னியின் செல்வன் நாவலை நான் தான் படமாக்க இருந்தேன் என்று
இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
கல்கியின் பிரமாண்ட நாவலான 'பொன்னியின் செல்வனை' படமாக்கி வருகிறார் இயக்குனர்
மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
இதில் விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

அடுத்த ஷெட்யூல்
இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வந்தது. பின்னர் பொங்கலுக்கு முன் படக்குழு சென்னை திரும்பியது. அடுத்த ஷெட்யூல் சென்னையில் வரும் 1 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் நாவலை நான் தான் படமாக்க இருந்தேன் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

21 ஆம் தேதி ரிலீஸ்
மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் பாரதிராஜா. இதில், மவுனிகா, ஜோ மல்லூரி, ராசி நட்சத்திரா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் பற்றி பேசிய பாரதிராஜா இந்த தகவலைச் சொன்னார். இந்தப் படம் வரும் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஒரு கதையின் டைரி
அவர் கூறும்போது, நான் நடிப்பதற்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன். அந்த காலகட்டத்தில் நடிகர்கள் அழகாக இருந்ததால், நடிக்க பயந்தேன். இப்போது அப்படியல்ல. நடிப்பதற்கு அழகு தேவையில்லை. அதனால் நடித்துவருகிறேன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் இப்போது படமாக்கி வருகிறார்.

எம்.ஜி.ஆர்
'ஒரு கதையின் டைரி' படத்தின் பொன்மானே... பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தேன். அப்போது எம்ஜிஆர் படப்பிடிப்புக்கு வந்தார். தனது எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமல், ஸ்ரீதேவி, ரேவதி நடிப்பில், பொன்னியின் செல்வன் நாவலை படமாக இயக்கச் சொன்னார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அமெரிக்கா
ஒரே படத்தில் முழுக் கதையையும் அடைக்க முடியுமா? என்று யோசித்தேன். இருந்தாலும் நானும் கமலும் சரி பண்ணுகிறோம் என்றோம். ஆனால் அது படமாக மாறுவதற்குள் எம்ஜிஆர் உடல்நலம் சரியில்லாமல் அமெரிக்கா சென்றுவிட்டார். அதனால் அந்த முயற்சியை கைவிட்டோம் என்றார்.


Click it and Unblock the Notifications











