Manoj Bharathiraja: 2 மாதத்திற்கு முன்னரே சொன்ன மனோஜின் சகோதரி.. நெப்போலியன் சொன்ன அந்த விஷயம்
சென்னை: ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் என்றால், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுச் செய்தி தான். நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா நேற்று அதாவது மார்ச் 25ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 48. மனோஜ் பாரதிராஜாவின் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் நெப்போலியன் இரங்கல் தெரிவித்து, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நெப்போலியன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதாவது, " மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய எங்கள் குருநாதர் இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா அவர்களின் அன்பு மகன் மனோஜ் மறைவு செய்தி கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியுற்றோம்...! மிகவும் வேதனையாக இருக்கிறது..! இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் மலேசியாவில் வசிக்கும் எங்கள் குருநாதரின் மகள் ஜனனி வீட்டிற்கு சென்று இருந்தோம்..! அப்போது வீட்டில் உள்ள அனைவரைப் பற்றியும் விசாரித்தோம்..! அப்போது ஜனனி, அவரது அண்ணன் மனோஜ் உடல்நிலை பற்றி விவரித்தார் ..! இப்பொழுது நன்றாக இருக்கிறார் என்று சொன்னார்..! அதற்குள் இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை..! அவர்கள் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை..!

2 மாதங்கள்: எங்கள் குருவிற்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும்,அவரது உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரு. பாரதிராஜா அவர்களின் கோடானு கோடி ரசிகர்களுக்கும், அன்பு தம்பி மனோஜின் ரசிகர்களுக்கும், எங்களது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்..! ️ ️ ️ ️ ️ ️ ️ ️ ️ ️ ️ ️ ️" என பதிவிட்டுள்ளார். இவரது பதிவு பலரையும் வேதனைக்கு உள்ளாக்குகிறது. மேலும், அவர் குறிப்பிட்டுள்ளதைப்போல், பாரதிராஜாவின் மகள் ஜனனியை சந்தித்தபோது, மனோஜின் உடல்நிலை குறித்து மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார் என்பது தெரியவருகிறது. மனோஜ் பாரதிராஜாவுக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் 'ஓபன் ஹார்ட் சர்ஜரி' செய்யப்பட்டது என்ற தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

படப்பிடிப்பு ரத்து: மனோஜ் பாரதிராஜாவுக்கு, சென்னை நீலாங்கரையில் உள்ள கபாலீஸ்வரன் நகரில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது. எனவே மனோஜ் பாரதிராஜாவின் உடல் நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் தொடர்ந்து அங்கு வந்த வண்ணம் உள்ளார்கள். நேற்றில் இருந்து அவரது வீட்டில் திரைப்பிரபலங்கள் குவிந்து வருவதால் ரசிகர்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, பாரதிராஜாவுக்கு ஆறுதல் சொல்ல பாரதிராஜாவின் வீட்டிற்குச் சென்று கொண்டு உள்ளார்கள்.
மனோஜ்க்கு பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதேபோல் பாரதிராஜாவின் மற்றொரு படமான ஒரு கைதியின் டைரி படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. இந்த படத்தில் அஜித் நடித்தால்தான் சரியாக இருக்கும் என மனோஜ் பல பேட்டிகளில் கூறியுள்ளார். ஆனால் இந்த ஆசைகள் எதுவுமே நிறைவேறவில்லை.


Click it and Unblock the Notifications











