பாரதிராஜா உயிரிழப்பு.. ஒவ்வொரு நண்பராக இழக்கிறேன்..கலங்கிய விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சல் செலுத்திவருகிறார்கள். அதற்கு பிறகு அவர் குறித்த தங்களது நினைவுகளையும் கலங்கியபடி ஷேர் செய்துவருகிறார்கள். அந்தவகையில் இயக்குநரும், முதலமைச்சர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் வந்து பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா; தனது மகன் மனோஜ் உயிரிழந்ததிலிருந்தே சரியில்லை. முதலில் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார்; பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். அதனையடுத்து தனியார் மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடன் பணியாற்றியவர்கள், அவர் அறிமுகப்படுத்தியவர்கள் என பலரும் நேரில் சென்று சந்தித்துவிட்டு வந்தார்கள்.

உயிரிழந்த இமயம்: தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவரது உடல்நலம் கொஞ்சம் தேறியது. இதனால் குடும்பத்தினரும், நண்பர்களும் நிம்மதியாக இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் இன்று மீண்டும் அவரது உடல்நிலை மோசம் ஆனது. எனவே சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அவரது உயிரிழப்பு சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பிரபலங்கள் நேரில் அஞ்சலி: பாரதிராஜா உயிரிழந்ததை தொடர்ந்து முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, சிவக்குமார் என பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஏ.சந்திரசேகர் அஞ்சலி: இந்நிலையில் இயக்குநரும், முதலமைச்சர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாரதிராஜா சினிமாவில் ஒரு சரித்திரம். இன்று அவர் பிரிந்துவிட்டார். அவர் சாதாரண சரித்திரம் இல்லை. எங்கள் பயணம் நண்பர்களாக ஆரம்பித்தது. இப்போது ஒவ்வொரு நண்பராக நான் இழந்துவருகிறேன். அதை நினைக்கும்போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
புதிய வேதம் அவர்: அவரது ஒவ்வொரு படைப்பும் ஒரு கதை சொல்லும். இன்னும் சொல்லப்போனால்; அவர் வேதம் புதிது என்ற படத்தை எடுத்தார். அவரே புதிய வேதம்தான். அப்படி வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். சினிமாவில் அவரது கை மேலே வருவதையும், என் இனிய தமிழ் மக்களே என்று சொன்னதையும் மறக்க முடியாது. இன்றைய தலைமுறையினருக்கு அவருடைய படங்கள் பாடங்கள். அவருடைய இழப்பை ஈடுகட்ட முடியாது. நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும்" என்றார்.
இறுதி சடங்குகள் விவரம்: பாரதிராஜாவின் இறுதி சடங்குகளும் வெளியாகியிருக்கின்றன. அவரது உடல் இன்று இரவு ஒன்பது மணிக்கு சென்னையிலிருந்து தேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கே நாளை மாலை மூன்று மணிக்கு வத்தலகுண்டு அருகே கொடைக்கானல் செல்லும் பாதையில் அடக்கம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications
