எம்பி.,யாக நியமிக்கப்பட்ட இளையராஜா...முதல் ஆளாக வாழ்த்து சொன்ன பாரதிராஜா
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சேவையாற்றியவர் இளையராஜா. அவர் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகின் இசைத்துறையில் அரசாட்சி செய்து வந்தார் என்றால் அது மிகையில்லை. அவர் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். அவர் ஐந்து முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

79 வயதாகும் இளையராஜாவை இந்திய அரசு 2010-ம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. அதன் பின் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. பாபாசாகேப் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோதியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோதி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்ட நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போதே இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது.
இந்நிலையில் இன்று, "இளையராஜாவின் படைப்பு மேன்மை தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்திருக்கிறது என மோடி தெரிவித்துள்ளார். அதே அளவுக்கு அவருடைய வாழ்க்கைப் பயணமும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வளர்ந்து நிறைய சாதித்துள்ளார். அவர் ராஜ்ய சபாவுக்கு வருவதில் மகிழ்ச்சி." என பிரதமர் மோடி ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இளையராஜா எம்பி.,யாக நியமிக்கப்பட்ட அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே அவரின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான பாரதிராஜா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட பழைய போட்டோவை பகிர்ந்த பாரதிராஜா, மாநிலங்களவை
நியமன உறுப்பினராக நியமக்கிப்படள்ள என் உயிர் தோழனுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவும் பாரதிராஜாவும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே நெருங்கிய நண்பர்கள். தமிழ் சினிமாவை ஒருகாலத்தில் ஆட்சி செய்த முடிசூடா மன்னர்கள் இந்த இரண்டு ராஜாக்கள். சிறு வயதில் இருந்தே நண்பர்களாய் பழகி வந்த அவர்கள் இருவரும் சினிமாவிலும் சேர்ந்தே ஜொலித்தார்கள். 'செந்தூரப்பூவே செந்தூரப்பூவே... நீதானா அந்த குயில்'.. என காலத்தால் அழியாத பல பொக்கிஷங்களை உருவாக்கினார்கள்.
திடீரென ஒருநாள் இருவருக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. பல ஆண்டுகால பால்ய நட்பு உடைந்தது. இருவரும் பல ஆண்டுகள் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். சமீபத்தில் இருவரும் பல ஆண்டு கால கசப்புக்களை மறந்து ஒன்றாக சந்தித்து பேசியதை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


Click it and Unblock the Notifications











