En Uyir Thozhan Babu - பாரதிராஜாவின் உயிர் தோழன் ஹீரோ பாபு உயிரிழந்தார்.. எப்படி விபத்து நடந்தது தெரியுமா?
சென்னை: En Uyir Thozhan Babu (என் உயிர் தோழன் பாபு) பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர் பாபு படுத்த படுக்கையாக இருந்த சூழலில் இன்று உயிரிழந்தார்.
16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை அவுட் டோருக்கு அழைத்து சென்ற பெருமைக்கு சொந்தக்காரர். அவர் படம் இயக்க வந்த பிறகுதான் கிராமங்களிலிருந்து பலர் சென்னைக்கு திரைப்பட கனவோடு தைரியமாக படையெடுக்க ஆரம்பித்தனர். அதேபோல் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்டோர் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் திகழ்ந்தவர்கள்.

பாரதிராஜவின் அறிமுகங்கள்: பாரதிராஜா இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி சினிமாவில் பலரை நடிகராகவும், நடிகையாகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அப்படி அவர் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர்தான் நடிகர் பாபு. என் உயிர் தோழன் என்ற படத்தை பாரதிராஜா கடந்த 1990ஆம் ஆண்டு இயக்கினார். படம் சரியாக போகாவிட்டாலும் படத்தில் இடம்பெற்ற ஏ ராசாத்தி பூ சூட்டி வா வா, குயிலு குப்பம் குயிலு குப்பம் கோபுரம் ஆனதென்ன பாடல்களின் மூலம் பாபு அடையாளப்பட்டார். மேலும் நன்றாக நடிக்கக்கூடியவர் என்ற பெயரையும் பெற்றார்.
அடுத்தடுத்த படங்கள்: இதனால் அடுத்தடுத்து பொண்ணுக்கு சேதி வந்தாச்சு, தாயம்மா, பெரும்புள்ளி என்று வரிசையாக படங்களில் நடித்தார். கண்டிப்பாக 90களில் பெரிய ரவுண்டு வருவார் என்று ஆரூடம் கூறப்பட்டது. ஏனெனில் ராமராஜன் எப்படி கிராமத்து பாணியில் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து சாமானிய ரசிகர்களிடம் சென்று சேர்ந்தாரோ அதற்கான அத்தனை அறிகுறிகளும் பாபுவிடமும் தென்பட்டன.
விபத்து: சூழல் இப்படி இருக்க தனது ஐந்தாவது படமாக மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்தில் நடித்தார். அதில் ஒரு சண்டைக்காட்சியில் டூப் போட்டுக்கொள்ள மறுத்து ரிஸ்க் எடுத்து தானே நடித்தார். இது ரொம்பவே ரிஸ்க் ஏதேனும் விபரீதம் நடந்துவிடப்போகிறது என படக்குழுவினர் கடுமையாக எச்சரித்திருக்கின்றனர். ஆனால் ரிஸ்க் எடுத்த பாபு பல அடி உயரத்திலிருந்து குதித்திருக்கிறார். இருப்பினும் கணிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்தில் அவர் விழுந்ததால் முதுகு எலும்பு உடைந்தது. மேலும் காயமும் ஏற்பட்டது. தொடர்ந்து அதை சரி செய்ய எத்தனையோ அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டாலும் குணமாகவில்லை.
30 வருடங்கள் படுக்கை: இதனால் கடந்த 30 வருடங்களாகவே படுத்த படுக்கையாகத்தான் இருந்தார் பாபு. பாரதிராஜாகூட சமீபத்தில் நேரில் சென்று பாபுவை நலம் விசாரித்தார். அப்போது ரொம்பவே எமோஷனலும் ஆனார் அவர். இந்நிலையில் அவரது உடல்நிலை ரொம்ப பலவீனமடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவிட்டார். அவரது உயிரிழப்பு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











