திடீரென தள்ளிப்போன அரவிந்த்சாமி படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை : அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகி கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகவிருந்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. 'இரும்புத்திரை', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'நடிகையர் திலகம்' ஆகிய மூன்று படங்கள் மட்டும் ரிலீஸ் ஆகின.
தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்ட நிலையில் திடீரென படத்தின் ரிலீஸை தள்ளிவைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே பல முறை தள்ளிவைக்கப்பட்டு இந்த முறையும் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணத்தை தயாரிப்பு நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை. குறைவான தியேட்டர்களே ஒப்பந்தமானதால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது.
'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ஹீரோ அரவிந்த்சாமியும் ரிலீஸ் தள்ளிப்போனதால் அதிருப்தி அடைந்து மனக்குமுறலை வெளிப்படுத்தினார். இந்நிலையில், 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் மே 17-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'காளி', அதர்வா நடித்துள்ள 'செம போத ஆகாதே' ஆகிய படங்கள் மே 18 அன்று ரிலீஸ் ஆகவிருக்கின்றன. மீண்டும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் தள்ளிப்போகாது என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











