பெங்களூரில் இருந்து சொந்த ஊர் வந்தவருக்கு செக்கப்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிரபல ஹீரோயின்!
சென்னை: பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பிரபல நடிகை தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சம் தளர்த்தப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க, மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி மீட்டது.

சொந்த ஊர்
வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். லாக்டவுன் காரணமாக பிறபகுதிகளில் சிக்கிக் கொண்டவர்கள் அனுமதி பெற்று தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதில் பிரபலங்களும் விதிவிலக்கல்ல. வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது தெரியவில்லை.

நடிகை பாவனா
உள்நாட்டு விமானங்கள் நேற்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன. இதற்கான கட்டணம் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல நடிகை பாவனா, தனது சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூருக்கு நேற்று வந்தார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் இவர்.

திருமணம்
தமிழ், மலையாளம் தவிர தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்த நவீனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து இருவரும் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார்.

கணவர் வீட்டில்
இப்போது, சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் பஜராங்கி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இன்ஸ்பெக்டர் விக்ரம் 2020, கோவிந்தா கோவிந்தா ஆகிய கன்னட படங்களிலும் மலையாளத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் லாக்டவுன் காரணமாக பெங்களூரில் கணவர் வீட்டில் இருந்த பாவனா, சொந்த ஊரான திருச்சூர் செல்ல முடிவு செய்தார்.
Recommended Video

கொரோனா டெஸ்ட்
அதன்படி, பெங்களூரில் இருந்து கேரள எல்லையான முத்தங்கா வரை கணவர் நவீனுடன் காரில் வந்த நடிகை பாவனா, அங்கிருந்து தனது சகோதரருடன் திருச்சூருக்குச் சென்றார். இதையடுத்து அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை என்றாலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











