Bhavatharini AR Rahman: “இளையராஜா, யுவனுடன் நான் இருக்கிறேன்” பவதாரிணி மறைவு... AR ரஹ்மான் உருக்கம்
சென்னை: இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி நேற்று உயிரிழந்தார். கேன்சர் பாதிப்பு காரணமாக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் பவதாரிணி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பவதாரிணி மறைவு குறித்து ஏஆர் ரஹ்மான் உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.
பவதாரிணி மறைவுக்கு ஏஆர் ரஹ்மான் இரங்கல்
பின்னணிப் பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 47. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் பவதாரிணி உயிரிழந்தார். இதனையடுத்து பவதாரிணி மறைவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானும் பவதாரிணிக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். “பவதாரிணி மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககன வெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா Our hearts are with you in this time of sorrow” என குறிப்பிட்டுள்ளார்.
ஏஆர் ரஹ்மான் ஆரம்பத்தில் இளையராஜாவிடம் 500க்கும் மேற்பட்ட படங்களில் உதவியாளராக வேலை பார்த்துள்ளார். அப்போது யுவன், கார்த்திக் ராஜா, பவதாரிணி ஆகியோருடன் ஒரு சகோதரனாக பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த இருவர் படத்தில் பவதாரிணியும் ஒரு பாடலை பாடவிருந்தாராம். ”ஹலோ மிஸ்டர் எதிர்க் கட்சி” என்ற பாடலை பவதாரிணி பாட வேண்டும் என ஏஆர் ரஹ்மான் விரும்பியுள்ளார். ஆனால், அது நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கையில் உயிரிழந்த பவதாரிணியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து இளையராஜா வீட்டில் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. பவதாரிணியின் உடலுக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்பின்னர் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
இதனிடையே இலங்கையில் நாளை நடைபெறவிருந்த இளையராஜாவின் இசை கச்சேரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்காக இளையராஜா இரு தினங்களுக்கு முன்னரே இலங்கை சென்றிருந்தார். இதனால் தான் பவதாரிணி உயிரிழந்ததும் உடனடியாக அவர் மருத்துவமனை சென்றிருந்தார்.


Click it and Unblock the Notifications











