Bhavatharini - பாட முடியாமல் மேடையில் கலங்கிய பவதாரிணி.. தட்டிக்கொடுத்து தேற்றிய இளையராஜா.. எமோஷனல் வீடியோ
சென்னை: பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் சூழலில் அவரும் இளையராஜாவும் மேடையில் ஒன்றாக பாடிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
பவதாரிணி தனது தந்தை இளையராஜா, சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா போலவே இசையோடு பயணப்பட்டவர். இளையராஜாவுக்கு ஒரே மகளான இவர்தான் அவர்களது ஒட்டுமொத்த சொந்தத்திலும் மூத்த பெண் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே அனைவருக்கும் செல்ல பிள்ளையாக இருந்தார். சிறு வயது முதலே இசை மீது ஆர்வத்தோடு இருந்த பவதாரிணி முறையாக இசை கற்றுக்கொண்டு பாடல்களை பாட ஆரம்பித்தார். சினிமாவில் பாடகியாக அறிமுகமாகும் முன்னரே 1991ஆம் ஆண்டு ராஜாவின் ரமணமாலை பாடலை இளையராஜாவோடு இணைந்து பாடியிருந்தார்.

சினிமாவில் அறிமுகம்: பிறகு பிரபுதேவா, ரோஜா நடித்து இளையராஜா இசையமைத்த ராசய்யா படத்தில் இடம்பெற்ற காதல் வானிலே காதல் வானிலே பாடலை பாடி பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப் பாடலுக்கு பிறகு காதலுக்கு மரியாதை, அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, டைம், அழகி, பாரதி,உல்லாசம், கோவா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார். இவற்றில் பாரதி படத்தில் இடம்பெற்ற மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.
கடைசி பாடல்: பெரும்பாலும் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் இசையில் பாடிய பவதாரிணி தேவா, சிற்பி, ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக அனேகன் படத்தில் இடம்பெற்ற 'ஆத்தாடி ஆத்தாடி' பாடலை பாடியிருந்தார் அவர். அதன் பிறகு பாடுவதை நிறுத்திவிட்டார்.
பித்தப்பை புற்றுநோய்: இதற்கிடையே பாடகியாக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் பத்து படங்களுக்கு பணியாற்றியிருந்தார். மேலும் சில படங்களுக்கு இசையமைக்கவும் அவர் ஒத்துக்கொண்டிருந்த சூழலில் அவருக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த சில காலமாகவே சிகிச்சை எடுத்து வந்தார் அவர். ஆனால் இங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஒத்து வராததால் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக கடந்த மாதம் சென்றார்.
உயிரிழப்பு: அங்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் இன்று இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளின் உயிரிழப்பை தெரிந்துகொண்ட இளையராஜா கனத்த இதயத்துடன்; பவதாரிணி உடல் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் இருக்கிறார். மனைவியையும் இழந்து தற்போது மகளையும் இழந்திருக்கும் அவருக்கு பலரும் தங்களது ஆறுதலை சொல்லிவருகிறார்கள்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் பவதாரிணி தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது இளையராஜா இசையமைத்த ராஜாவின் ரமண மாலையில் 'ஆராவமுதே' என்ற பாடலை இளையராஜாவும், பவதாரிணியும் சேர்ந்து ஒரு மேடையில் பாடுகிறார்கள். கேட்பவரை ஆட்கொள்ளும் வகையில் ராஜா அந்தப் பாடலை இசையமைத்திருப்பார். அந்தப் பாடலின் சரணத்தை பாடும்போது பவதாரிணி தேம்பி தேம்பி அழுகிறார். அதை கவனித்த இளையராஜா பவதாரிணியின் முதுகில் தட்டிக்கொடுத்து அவரை தேற்றிவிட்டு தானும் பாடுகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஏனோ இந்த வீடியோ பார்க்கும்போது இப்போது கண்கள் கலங்குகின்றன. பவதாரிணியை இளையராஜா தேற்றிவிட்டார்; இளையராஜாவை யார் தேற்றுவார் என்று சோகத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











