அடக்கடவுளே.. 10 நாள் முன்னாடியே உயிரிழக்கப் போறோம்னு பவதாரிணிக்கு தெரியுமா?.. அதிர்ச்சி தகவல்!
சென்னை: பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளராக இசையுலகில் தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி பல கோடி ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து வந்த பவதாரிணி திடீரென கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், ஜனவரி 25ம் தேதி மாலை 5.30 மணியளவில் இலங்கையில் காலமானார். அவரது மறைவு அப்பா இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
"மயில் போல பொண்ணு ஒண்ணு.. கிளி போல பேச்சு ஒண்ணு.. குயில் போல பாட்டு ஒண்ணு.. கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல" என பாரதி படத்தில் பவதாரிணி பாடிய பாடலுக்காக தேசிய விருதையே வென்றார். "ஒளியிலே தெரிவது தேவதையா", "மெஹரசைலா" என பல ஹிட் பாடல்களை பாடிய பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், இந்த தேதியில் தான் தான் இறக்கப் போகிறேன் என்பதையும் முன்கூட்டியே அறிந்து கொண்டார் என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

நரகமான வாழ்க்கை: "சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும்" என சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஒரு வசனம் பேசுவார். ஆனால், தான் எந்த தேதியில் மரணிக்கப் போகிறோம் என்பதையே முன்கூட்டியே பவதாரிணி அறிந்து வைத்திருந்தாலும் கடைசி வரை நம்பிக்கையை விடாமல் ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருக்கிறார். ஆனால், அவருக்கு எந்தவொரு சிகிச்சையும் பலனளிக்காமல் அவரது உயிரை பறித்துக் கொண்டது.
கல்லீரல் புற்றுநோய்: இளையராஜாவின் செல்ல மகள் பவதாரிணி பல சினிமா படங்களில் பாடல்கள் பாடியும் சில படங்களுக்கும் இசையமைத்தும் வந்த நிலையில், கல்லீரல் புற்றுநோய் காரணமாக கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு சினிமா விழாக்கள் மற்றும் படங்களில் பணியாற்றுவது என எதிலுமே கவனத்தை செலுத்தவில்லை. கடைசியாக தம்ப் யுவன் சங்கர் ராஜா கேட்டுக் கொண்டதன் பெயரில் சிம்புவின் மாநாடு படத்திற்கு பாடல் பாடியிருக்கிறார்.
கடந்த ஆண்டு குடும்பத்தினருடன் சந்திப்பு: கடந்த சில ஆண்டுகளாக எப்படியாவது இந்த புற்றுநோய் பாதிப்பை சரி செய்து விட வேண்டும் என கீமோதெரபி உள்ளிட்ட பல சிகிச்சைகளை மேற்கொண்ட பவதாரிணிக்கு நோய் தீவிரமாகிக் கொண்டே போகின்றது என்கிற பயம் ஏற்பட்டு கடந்த ஜூலை மாதமே தனது அப்பா, சித்தப்பா, அண்ணன் கார்த்திக் ராஜா மற்றும் தம்பி யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து சொந்தங்களையும் ஒன்றாக அழைத்து சந்தித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
10 நாட்களுக்கு முன்பே தெரியுமாம்: அதன் பின்னர் இலங்கையில் இந்த புற்றுநோயை ஆயுர்வேத வைத்தியம் மூலம் குணப்படுத்தி வருகின்றனர் என்பதை அறிந்து நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட பவதாரிணி அங்கே சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். கடந்த 6 மாத காலமாக அவர் சிகிச்சையில் தான் இருந்துள்ளார் என்கின்றனர். ஆனால், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே பவதாரிணியின் நோய் தீவிரம் அடைந்து விட்டதாகவும் இன்னும் 10 நாட்களில் உயிரிழந்து விடுவீர்கள் என்றே மருத்துவர்கள் கை விரித்து விட்டதாகவும், ஆனால், தொடர்ந்து எப்படியாவது பிழைத்து விடுவோம் என்கிற நம்பிக்கையில் யாரிடமும் தனது வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இசையாக என்றுமே இருப்பார்: கலைஞர்களுக்கு என்றுமே மரணமில்லை என்று தான் சொல்வார்கள். உடல் மறைந்தாலும் அவர்கள் பெயரும் நினைவும் என்றுமே ரசிகர்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும். பவதாரணியின் மாயக் குரல் போல இனி ஒரு குரலை ரசிகர்கள் கேட்க முடியாது. ஆனால், அவரது பாடல்கள் என்றுமே ரசிகர்களின் இதயங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.


Click it and Unblock the Notifications











