போஜ்புரி நடிகை தற்கொலை வழக்கு.. பணத்துக்காக நடந்த கொலை.. பரபரப்பை கிளப்பிய ஆகான்ஷா துபேவின் அம்மா!
மும்பை : போஜ்புரி நடிகை ஆகான்ஷா துபே தற்கொலை செய்து கொண்டதற்கு பாடகர் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் சிங் தான் காரணம் என ஆகான்ஷாவின் தாயார் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மேரி ஜங் மேரா ஃபைஸ்லா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆகான்ஷா துபே, முஜ்சே ஷாதி கரோகி, வீரோன் கே வீர், ஃபைட்டர் கிங், கசம் பைடா கர்னே KI 2 என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
படப்பிடிப்புக்காக வாரணாசிக்கு சென்ற ஆகான்ஷா துபே, அங்கு ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆகான்ஷா துபே
25 வயதே ஆன ஆகான்ஷா துபே தற்கொலை விவகாரம் குறித்து வாரணாசி சாரநாத் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, ஆகான்ஷா துபேவின் மேக்கப் மேனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நான் அவரின் அறையின் கதவை பல முறை தட்டினேன் ஆனால், அவர் திறக்கவில்லை. குளியலறையில் தண்ணீர் கொட்டும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.

தூக்கில் தொங்கிய நிலையில்
இதனால், வெளியில் காத்துக்கொண்டே இருந்தேன். ஆனால், அரைமணி நேரத்திற்கு மேலாகியும் அவர் கதவை திறக்காததால் எனக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, நான் ஹோட்டல் ஊழியர்களை அழைத்தேன். அவர்களும் பலமுறை கதவை தட்டிப்பார்த்தார்கள், அப்போதும் கதவு திறக்கப்படாததால், வேறு ஒரு சாவியை வைத்து அறையை திறந்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார் என மேக்கப் மேன் ராகுல் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாடகர்கள் தான் காரணம்
இதையடுத்து, நடிகை ஆகான்ஷா துபேயின் தாயார், தனது மகளின் தற்கொலைக்கு காரணம் பாடகர் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் சிங் தான் என குற்றம்சாட்டி உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அவர்களுக்காக பல படங்களில் என் மகள் நடித்து இருக்கிறார். இதில் எதற்குமே அவர்கள் பணம் தரவில்லை. நடித்தற்கான பணத்தை தருமாறு என் மகள் அவர்களிடம் கேட்டுள்ளார்.

பணத்திற்காக கொலை
ஆனால், மார்ச் 21ந் தேதி சமர் சிங்கின் சகோதரர் சஞ்சய் சிங், கொன்றுவிடுவேன் என மிரட்டியதாக தொலைபேசி மூலம் என்னிடம் கூறி அழுதார். நான் தைரியமாக இரு என்று கூறியிருந்தேன். ஆனால், அதற்குள் இந்த விபரீத நடந்துவிட்டது. பணத்திற்காகத்தான் அவர்கள் இருவரும் சேர்ந்து என் மகளை கொலை செய்து இருக்கிறார்கள். என் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என ஆகான்ஷா துபேயின் தாயார் மது துபே கூறியுள்ளார். இதையடுத்து,வாரணாசி போலீசார் பாடகர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை ஆகான்ஷா துபே காதலர் தினத்தன்று பாடகர் சமிரை காதலிப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











