மனம் உடைஞ்சு வெளியே அழுவது.. அப்படியே வெளியே அனுப்பிவிட போகிறார்கள்?.. தனலட்சுமியை கண்டித்த கமல்!
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நேரலையிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 20 போட்டியாளர்கள் களமிறங்கி 4 குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த சீசன்களை போல இல்லாமல் ஆரம்பம் முதலே இந்த சீசன் போட்டி, சண்டை, அழுகை, ஆர்ப்பாட்டம் என களைகட்டி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிரதானமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டு தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்ட நிலையில் கடந்த சீசன்களை போல இல்லாமல் முதல் நாளிலேயே பல்வேறு டாஸ்க்குகளுடன் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதல் போட்டியாளர்
யூடியூப் மூலம் பிரபலமான ஜிபி முத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக நுழைந்தார். கிராமத்தான் போல இருக்கும் இவர் என்ன செய்து விடப்போகிறார் என்ற நினைப்பை முதல் நாளிலேயே தவிடு பொடியாக்கினார் ஜிபி முத்து. ஆரம்ப நாளிலேயே இவருக்காக ரசிகர்கள் ஆர்மியை துவங்கும்வகையில் செயல்பட்டார்.

இயல்பாக பழகிய ஜிபி முத்து
சக போட்டியாளர்களுடன் அன்பாகவும் இயல்பாகவும் பழகவே ஜிபி முத்து முற்பட்டார். ஆனால் இவரது வெகுளித்தனத்தை பயன்படுத்தி இவரை வைத்து செய்தனர் சக போட்டியாளர்கள். ஜிபி முத்துவை கலாய்ப்பதும், அவருடன் சண்டையிடுவதுமாக இவர்களது போக்கு காணப்பட்டதை அவரது ரசிகர்கள் ஏற்கவில்லை.

ஜிபி முத்து ஆர்மி
அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு ஜிபி முத்துவை கலாய்த்தார்களோ அந்த அளவிற்கு அவரது ஃபேன் பேஸ் அதிகரித்தது. ஜிபி முத்து ஆர்மியில் அவருக்கு ஆதரவான பல வீடியோக்கள், மீம்ஸ்கள் பறந்தன. இதனிடையே ஜிபி முத்துவிடம் சண்டை பிடிக்கத் துவங்கினார் சக போட்டியாளர் தனலட்சுமி. இதற்கு அவர்களுக்குள் இருந்த முன்பகையே காரணம் என்றும் கூறப்பட்டது.

பரபரப்பை கிளப்பிய தனலட்சுமி
இதையடுத்து, தனலட்சுமியை ஜிபி முத்து ஆர்மி வைத்து செய்தது. ஒருபுறம் மற்றவர்கள் அதிரடியாக ஒன்றுமே செய்யாத நிலையில், தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியதை ரசிகர்கள் ஆதரித்தனர். அவர் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனார். இதனிடையே இன்று வெளியிடப்பட்டுள்ள மூன்றாவது ப்ரமோவில் தனலட்சுமி கமலிடம் இந்த நிகழ்ச்சி குறித்த தன்னுடைய குற்றச்சாட்டை பதிவு செய்தார்.

கமலிடம் குற்றச்சாட்டு
அதில் இந்த நிகழ்ச்சியில் தான் நினைத்ததை பேசலாம் என்று தான் நினைத்து வந்ததாக அவர் கூறினார். ஆனால் அதை தன்னால் செய்ய முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து பேசிய தொகுப்பாளர் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியின் சேலஞ்சே அதுதான் என்று குறிப்பிட்டார்.

கமல்ஹாசன் கேள்வி
வெளியில் மட்டும் மற்றவர்கள் வாய்ப்பு கொடுத்தா பேசினீர்கள், நீங்களாக போனை எடுத்து நீங்களாகவே எதையோ செய்தீர்கள், அந்த முனைப்பை ஏன் இந்த நிகழ்ச்சியில் காட்டவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் தனலட்சுமி எதிர்பார்த்து வந்ததற்கு மாறுபட்டு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், மனம் உடைஞ்சு வெளியே அழுவது, அப்படியே வெளியே அனுப்பிவிட போகிறார்கள்? என்றும் தனலட்சுமியை கண்டித்தார். ரசிகர்கள் முதல் போட்டியாளர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஜிபி முத்துவிடம் சண்டை பிடித்தார் தனலட்சுமி. தொடர்ந்து அவர் நடிப்பதாகவும் தெரிவித்தார். இதனால் ஜிபி முத்துவை அழவும் வைத்தார். இந்த பிரச்சினையை தற்போது கமல்ஹாசன் கையிலெடுத்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோட் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











