ஈரோட்டில் மக்கள் வெள்ளத்தில் இளையராஜா.. நான்கு பாடல்கள் பாடி மகிழ வைத்தார்!
ஈரோடு: புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்க ஈரோடு வந்த இசைஞானி இளையராஜாவைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அவர்களுக்காக நான்கு பாடல்களை மேடையில் பாடினார் இளையராஜா.
ஈரோடு நகரில் பத்தாவது புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. சிறப்பு விருந்தினராக இசைஞானி இளையராஜா அழைக்கப்பட்டிருந்தார்.

குவிந்தது கூட்டம்
இளையராஜா வருவதை முன்கூட்டியே அறிவித்திருந்ததால், அவரைக் காண பல்லாயிரம் ரசிகர்களும் மக்களும் குவிந்துவிட்டனர் நிகழ்ச்சி நடந்த பன்னீர்செல்வம் பூங்காவில்.
இதனால் இளையராஜாவின் கார்கூட நுழைய முடியாத அளவுக்கு எங்கும் மக்கள் வெள்ளமாகக் காட்சி தந்தது.

நெரிசல்
பாதுகாப்புக்காக வந்த ஒரு காவலர், கூட்ட நெரிசலில் நிலை தடுமாறி விழ, அவரைத் தாங்கிப் பிடித்த இளையராஜா, 'பாத்து பத்திரமா வாங்க' என்று கூறிவிட்டு நடந்தார்.

அரங்குகள் திறப்பு
அதற்குப் பிறகு கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்ததால், நேரடியாக மேடைக்கு அழைத்துவரப்பட்டார் இளையராஜா. பின்னர் தொடக்க விழா மேடையில் பேசும்போது, நேரடியாக சென்று திறக்க முடியாததால், மானசீகமாக மேடையில் இருந்தபடியே திறந்துவைப்பதாகக் கூறி அரங்குகளைத் திறந்து வைத்தார்.

எங்கே பிரிவது?
மக்கள் கேட்டுக் கொண்டதால், இதயம் ஒரு கோயில், ஜனனி ஜனனி உள்பட நான்கு பாடல்களை மேடையில் பாடினார். இதயம் ஒரு கோயில் பாடலைப் பாடும்போது, 'நீயும் நானும் ஒன்றுதான்.. எங்கே பிரிவது?' என கூடியிருந்த மக்களைப் பார்த்து கை நீட்டிப் பாட, கூட்டம் ஆர்ப்பரித்தது!

உங்களைப் பார்க்கத்தான்
பின்னர், 'உங்களுக்காகத்தான் நான்... உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன்' என்று கூறி, தனக்கும் ஈரோட்டுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பைப் பகிர்ந்து கொண்டார்.

மக்களுடன்...
நீண்ட வருடங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தார் இளையராஜா. சமீப காலமாகத்தான் ரசிகர்களின், மக்களின் அழைப்புக்காக வெளியூர்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளார்.

பொங்கலன்று..
இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது, சொந்த ஊரான பண்ணைப் புரத்துக்கு ரசிகர்களை வரவழைத்து அவர்களுக்கு விருந்தளிக்கும் எண்ணத்தில் உள்ளார் இளையராஜா. தன் சொந்த செலவில் பண்ணைப் புரத்தில் சர்வதேச தரத்தில் கட்டப்படும் பிரமாண்ட பள்ளியையும் திறக்கவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











