Allu Kanakaratnam: அல்லு அர்ஜுன், ராம் சரணின் பாட்டி காலமானார்.. ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு ஓடி வந்த பேரன்கள்
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் அல்லு ராமலிங்கையாவின் மனைவி மற்றும் அல்லு அர்ஜுனின் பாட்டியான ஸ்ரீமதி அல்லு கனகரத்னம், சனிக்கிழமை அதிகாலை 1:45 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 94. வயது முதிர்வு காரணமாக அவர் இயற்கை எய்தினார். அவரது மறைவு செய்தியால் படப்பிடிப்புகளை அல்லு அர்ஜுன் மற்றும் ராம் சரண் உள்ளிட்ட பேரன்கள் ரத்து செய்துவிட்டு இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளனர்.
அல்லு கனகரத்னம் மறைவு, அல்லு குடும்பத்தையும், தெலுங்கு திரைப்பட உலகத்தையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல டோலிவுட் நட்சத்திரங்கள் பலர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அல்லு குடும்பத்தினர் மற்றும் தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது உடல், காலை 9 மணி முதல் அல்லு அரவிந்தின் இல்லத்தில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அவரது மருமகன், மெகாஸ்டார் சிரஞ்சீவி, இறுதி சடங்கு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
இறுதி சடங்குகள் இன்று பிற்பகல் கோகபேட்டில் நடைபெற உள்ளது. அல்லு கனகரத்னம் மறைவுச் செய்தி பரவியதும், பல டோலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்கள் அவரது மறைவு குறித்த செய்திகளாலும், தெலுங்கு சினிமாவின் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றின் மூத்த உறுப்பினராக அவரது வாழ்க்கையை போற்றும் செய்திகளாலும் நிரம்பியுள்ளன.

தெலுங்கு பிலிமிபீட் செய்திகளின் படி, அவரது பேரன்களான அல்லு அர்ஜுன் மற்றும் ராம் சரண், இந்த இக்கட்டான நேரத்தில் குடும்பத்துடன் இருக்க தங்கள் படப்பிடிப்பு வேலைகளை பாதியில் நிறுத்திவிட்டனர் என தெரிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் தீபிகா படுகோனுடன் வரவிருக்கும் படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்த அல்லு அர்ஜுன் உடனடியாக ஹைதராபாத் புறப்பட்டு வருகிறார். மைசூரில் 'பெத்தி' படப்பிடிப்பில் பிசியாக இருந்த ராம் சரண், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு குடும்பத்துடன் இருக்க வந்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள பவன் கல்யாண் மற்றும் நாக பாபு ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் வந்து இரங்கல் தெரிவிப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பல தலைமுறைகளாக தெலுங்கு சினிமாவுக்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய பெருமைமிக்க அல்லு குடும்பத்தின் ஒரு சகாப்தத்தின் முடிவை அல்லு கனகரத்னத்தின் மறைவு குறிக்கிறது.
தொழில்துறைக்கு பல தலைசிறந்த நட்சத்திரங்களை வழங்கிய ஒரு குடும்பத்தின் தூணாக, அவரது மரபு தொடர்ந்து நினைவுகூரப்பட்டு போற்றப்படும்.


Click it and Unblock the Notifications











