டைரக்டராக களமிறங்கும் பிக்பாஸ் அமீர்.. ஹீரோ -ஹீரோயின் யார் தெரியுமா.. வேற யாரு!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்கள் நடன இயக்குநர் அமீர் மற்றும் சின்னத்திரை சீரியல் நடிகை பாவனி.
இவர்கள் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்று சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி டைட்டிலை வெற்றிக் கொண்டனர்.
தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்த அறிவிப்பையும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அமீர் மற்றும் பாவனி. முதன்மை போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்தார் பாவனி. தொடர்ந்து வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் நிகழ்ச்சியில் நுழைந்தார் அமீர். 50 நாட்களுக்கு பிறகு இவர் நுழைந்ததால், ரசிகர்களை கவரும் வகையில் இவரது செயல்பாடுகள் காணப்பட்டன. குறிப்பாக பாவனி மீது இம்ப்ரஸ் ஆகி அவரிடம் ப்ரபோஸ் செய்தது ஏராளமான ரசிகர்களை இவருக்கு கொடுத்தது.

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி
ஆனால் அமீரின் காதலை பாவனி துவக்கத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவர் அமீரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்களும் எதிர்பார்ப்பை வெளியிட்டனர். ஆனால் இவர்களின் காதல் தொடர்ந்து இழுபறியிலேயே இருந்தது. தொடர்ந்து இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்துக் கொண்டனர். நடன இயக்குநரான அமீர் இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான பல டான்ஸ் மூவ்மெண்ட்களை கொடுத்து அதன்மூலம் நடுவர்களையும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

டைட்டிலை வென்ற ஜோடி
அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாவனி திணறிய நிலையில், அவரையும் சேர்த்துக் கொண்டு கைக்கோர்த்து பல நடன அசைவுகளை கொடுத்த அமீர், இந்த டைட்டிலையும் வெற்றிக் கொண்டார். இதையடுத்து அந்த வெற்றி மேடையிலேயே அமீரின் காதலை ஏற்றுக் கொண்டார் பாவனி. இதையடுத்து தங்களது திருமணம் குறித்த தகவலையும் சமீபத்தில் இருவரும் இணைந்து வெளியிட்டனர். ஆனால் ஒரு வருடம் கழித்தே தங்களது திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாரீசில் சுற்றுப்பயணம்
முன்னதாக அஜித்தின் துணிவு படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்த நிலையில், இந்த ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாரீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்த ஜோடி சிறப்பான பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்டத்திற்கு இந்த ஜோடி தற்போது நகர்ந்துள்ளது. அடுத்ததாக அமீர் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமீர் இயக்கும் புதிய படம்
இந்தப் படத்தில் அமீர் மற்றும் பாவனியே ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு சபீர் சுல்தான் இசையமைக்கவுள்ளதாகவும் செல்வா ஆர்கே எடிட்டிங்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பாலாஜி கே ராஜா என்பவர் ஒளிப்பதிவாளராக இயங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ரசிகர்கள் உற்சாகம்
பாவனியின் முந்தைய வாழ்க்கை அவருக்கு சிறப்பாக அமையவில்லை. அவரது கணவர் தற்கொலை செய்துக் கொண்டதாக பாவனி வருத்தம் தெரிவித்திருந்தார். இதேபோல அமீரும் பெற்றோர் இல்லாமல் அனாதை காப்பகத்தில் வளர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவித்த இவர்கள் இருவரும் வாழ்க்கையில் ஒன்றிணைந்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











