பரிசுத் தொகை ரூ. 50 லட்சத்தையும் நன்கொடையாக கொடுத்த பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர்
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கு பிக் பாஸ் 2 டைட்டிலை வென்ற கவுஷல் பரிசுத் தொகை ரூ. 50 லட்சத்தையும் தானமாக வழங்கிவிட்டார்.
தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நடிகர் நானி தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் தொலைக்காட்சி நடிகரும், மாடலுமான கவுஷல் வெற்றி பெற்றார்.
இறுதி வரை வந்த தனிஷ், சாம்ராட் ரெட்டி, தீப்தி ஆகியோரை தோற்கடித்து டைட்டிலை வென்றார் கவுஷல்.

கவுஷல்
தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் பிரபல நடிகர் வெங்கடேஷ் கவுஷலுக்கு டைட்டில் டிரோபியை கொடுத்து பாராட்டினார். பரிசுத் தொகை ரூ. 50 லட்சமும் கவுஷலுக்கு கொடுக்கப்பட்டது. கவுஷல் வெற்றி பெற்றதை பார்த்து அவரது ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

நன்கொடை
பரிசுத் தொகை ரூ. 50 லட்சத்தை வைத்து கவுஷல் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ என்று பேசப்பட்டது. ஆனால் அவரோ மொத்த பரிசுத் தொகையையும் நன்கொடையாக அளிப்பதாக அறிவித்து ரசிகர்களின் கை தட்டல்களை பெற்றார். கவுஷலின் தாய் புற்றுநோயால் அவதிப்பட்டபோது அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் இறந்துவிட்டார்.

நல்லது
பணம் இல்லாததால் தனது தாய் இறந்ததை பார்த்த கவுஷல் தனக்கு கிடைத்த ரூ. 50 லட்சத்தையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் சிகிச்சைக்கு அளித்துவிட்டார். அவரின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது. தமிழ் பிக் பாஸை போன்றே நானி பிக் பாஸ் வீட்டிற்கு சென்று அங்கிருந்த 2 போட்டியாளர்களான கவுஷல் மற்றும் கீதா மாதுரியை மேடைக்கு அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியேற்றம்
பிக் பாஸ் 2 வீட்டிற்கு சென்ற 3வது வாரத்திலேயே வெளியேற வேண்டியவர் கவுஷல். ஆனால் டாஸ்க் ஒன்றின்போது கிரீத்தி அவர் கண்களில் எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட பார்வையாளர்களுக்கு கவுஷல் மீது பரிதாபம் ஏற்பட்டு தங்கிவிட்டார். ட்விட்டரில் கவுஷலுக்கு ஆர்மி துவங்கப்பட்டு அவர்கள் ஓட்டு வேட்டை நடத்தினார்கள். கவுஷல் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியதால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











