“உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன் சார்”... இயக்குநர் வஸந்தபாலன் உருக்கமான கடிதம்!
சேரனுக்கு இயக்குநர் வஸந்தபாலன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சென்னை: பிக் பாஸ் வீட்டை விட்டு இயக்குனர் சேரன் உடனடியாக வெளியேற வேண்டும் என பிரபல இயக்குனர் வஸந்த பாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் நேற்று சேரனுக்கும் சரவணனுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் சரவணன் கோபப்பட்டு சேரனை கடுமையாக பேசியதாக புரமோவில் காட்டப்பட்டது. ஆனால் எபிசோடை பார்த்த போது சேரன் தான் சரவணனை வான்டடாக வம்புக்கு இழுத்தது தெரியவந்தது. ஏற்கனவே மீரா மிதுன் விவகாரத்திலும் சேரன் பெயர் கெட்டுப்போனது.
தேசிய விருது உள்பட பல விருதுகளை வாங்கிக் குவித்து புகழின் உச்சியை பார்த்த உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என பலரும் சேரனை விமர்சித்தனர். சேரனுக்கு ஆதரவாகவும் இணையத்தில் குரல்கள் ஒலிக்கிறது.
கோரிக்கை:
இந்நிலையில், தனது சமூகவலைதளப் பக்கம் வாயிலாக சேரனுக்கு இயக்குனர் வஸந்த பாலன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், சேரனை உடனடியாக பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சேரனுக்கு கடிதம்:
அப்பதிவில் அவர், "அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத் தொடும் என்றே நம்புகிறேன். உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யாகர்வத்துடன் நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது. பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள்.

திரை ஆளுமை:
பாரதிகண்ணம்மா,பொற்காலம்,ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள். திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள். காலத்தின் கரையான் உங்களையும், உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது. இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுமகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள்.

கௌரவக் குறைவு:
பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய... உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்" என வஸந்தபாலன் தெரிவித்துள்ளார்.

அசிங்கம்:
வஸந்தபாலனின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மிகவும் அக்கறையான பதிவு என அவர்கள் பாராட்டியுள்ளனர். அதோடு பாவம் பணக்கஷ்டம் காரணமாக அவர் உள்ளே சென்றிருப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். ஆனால், ‘பணத்துடன் அசிங்கத்தையும் சேர்த்து வாழ்நாள் முழுக்க சுமக்க வைத்து விடுவார்கள் போலயே' என வஸந்தபாலன் அவர்களுக்குப் பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











