பிக் பாஸ் 3: ‘நெஞ்சமெல்லாம் பல வண்ணம் கூடுதே’.. இந்த சீசன்ல இதெல்லாம் புதுசு கண்ணா புதுசு!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இம்முறை நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
விஜய் டிவியில் இன்னும் சில தினங்களில் பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பிக்க இருக்கிறது. ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மூன்றாவது முறையாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சென்னை பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இதற்கென பிரம்மாண்ட பிக்பாஸ் வீடு தயார் நிலையில் உள்ளது.

மாற்றமே மாறாதது:
இந்நிலையில், இம்முறை பிக்பாஸ் வீட்டில் பலமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த சீசன்களைப் போல் இல்லாமல், இம்முறை தமிழக கலாச்சாரம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஓவியங்களால் பிக்பாஸ் வீடு அழகுபடுத்தப்பட்டுள்ளது. அது தவிர கார்டன் பகுதியிலும் கோபுரம், கடைவீதி போன்ற ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன.

எங்கெங்கும் ஓவியம்:
வீட்டிற்குள் நுழைந்ததும் கையில் அரிவாளுடன் ஒரு உருவம் வெட்டத் தயாராகுவது போன்ற பொம்மை வைக்கப்பட்டுள்ளது. அதுதவிர பத்து தலை ராவணன் உருவம், கையில் விளக்கேந்திய அழகிய பெண்ணின் உருவம் என வீடு முழுவதும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

அட்டாச்சுடு பாத்ரூம்:
கடந்த சீசனில் முதன்முறையாக பிக் பாஸ் வீட்டில் சிறிய சிறை ஒன்று சேர்க்கப் பட்டிருந்தது. இம்முறை அதில் பாத்ரூமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறையில் அடைக்கப்படும் போட்டியாளர், தண்டனை முடியும் வரை எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வர முடியாது. கடந்தமுறை சிறை தண்டனை பெற்றவர்கள் பாத்ரூம் செல்வதற்காக அடிக்கடி வெளியில் பரோலில் வந்தது நினைவுகூரத் தக்கது.

பல வண்ணங்கள்:
வீட்டிற்குள் ஒருபுறம் ரஜினி மற்றும் கமலின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றிற்கு அருகே மிகப்பெரிய யானையின் ஓவியம் ஒன்றும் உள்ளது. கடந்த சீசன்களில் குறிப்பிட்ட சில வண்ணங்களே வீட்டை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், இம்முறை வீடு முழுவதும் வண்ணங்கள் தெளித்து விட்டது போன்று கலர்புல்லாக காட்சி அளிக்கிறது.


Click it and Unblock the Notifications











