மனதளவில் சோர்வாக உணர்ந்தால் உடனே ஆம்ஸ்ட்ராங்கைத்தான் வந்து பார்ப்பேன் - பிக்பாஸ் பிரபலம் ஓபன் டாக்!
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இந்தியாவின் தேசிய கட்சிகளில் ஒன்றாக இருக்ககூடிய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டுக்கு அருகில் 6 பேர் கொண்ட கும்பலால் நேற்று முன்தினம் அதாவது ஜூலை 5ஆம் தேதி மாலை 7.30 மணி முதல் 8 மணி அளவில் சரமாரியாக வெட்டிச் சாய்க்கப்பட்டார். அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனங்களைத் தெரிவித்ததுடன், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று அதாவது ஜூலை 7ஆம் தேதி வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது.

உண்மையான குற்றவாளிகள்: அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய கொண்டு வரப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பகுஜன் சாம்ஜ் கட்சியினர் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை எனவும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் எனவும் போராட்டம் நடத்தினர். இதே கருத்தை விசிக தலைவர் திருமாவளவனும் தெரிவித்திருந்தார்.
பொதுமக்கள் அஞ்சலி: அயனாவரம் இல்லத்துக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது உடல் இன்று காலை பந்தர் கார்டன் பள்ளிக்கு எடுத்து செல்லபட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையேதான் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் புதைக்க அனுமதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநகராட்சியிடம் அனுமதி கோரி மனு வழங்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி சார்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.
பிக்பாஸ் பிரபலம்: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிஸ்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவரும் கானா பாடகியுமான இசைவாணி ஆம்ஸ்ட்ராங்கின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கானா பாடல்கள் பாடி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் பேசுகையில், " 800க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார். ஒருவருக்கு உதவி செய்துவிட்டு அதனை யாரிடமும் சொல்லக்கூடாது எனக் கூறுவார். எங்களைப் பொறுத்தவரைக்கும் இது மிகப்பெரிய இழப்பு. அவருக்கே பாதுகாப்பு இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கின்றது. ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கே இந்த நிலமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது.

சோர்வாக இருந்தால்: எனக்கு தனிப்பட்ட முறையில் அவர் எவ்வளவோ உதவி செய்திருக்கின்றார். ஒரு பெண்ணாக கானா பாடல் பாடுவது என்பது மிகவும் சவாலான விஷயம். அப்படி இருக்கும்போது என்னை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார். மனதளவில் எப்போதாவது சோர்வாக உணர்ந்தால் உடனே நான் இவரைத்தான் வந்து பார்ப்பேன். அவர் எனக்குச் சொல்வது, நீ இன்னும் வளரனும், மனதளவில் வளரவேண்டும் என்பார். கோபப்படவே மாட்டார். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். இதுவரை அவர் செய்த நல்ல விஷயங்கள் வெளியில் வந்ததே கிடையாது. அவருக்கு சொந்த வீடு கட்டவேண்டும் என்று ஆசை. அதே இடத்தில்தான் துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது" இவ்வாறு பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











