Exclusive: பிக் பாஸ் மீது கொலகாண்டில் சித்தப்பு.. பைனல்ஸுக்கு வராதது பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் பங்கேற்காதது குறித்து காட்டமாக பதிலளித்துள்ளார் நடிகர் சரவணன்.
80களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் சரவணன். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பருத்தி வீரன் படத்தில் சித்தப்புவாக நடித்து மீண்டும் மக்களிடம் பிரபலமானார்.
பிக் பாஸ் வீட்டிலும் சித்தப்புவாகத் தான் இருந்தார். கவின், சாண்டி ஆகிய இருவரும் சரவணனை சித்தப்பு என்று தான் அழைத்து வந்தனர். இவர்கள் மூவரும் தான் ஒரு அணியாக முதலில் செயல்பட்டனர்.

அதிரடி வெளியேற்றம்
ஒரு எபிசோடில் பேருந்தில் பெண்களை உரசியதாக சரவணன் கூறியது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றினர்.

அமைதி
சரவணன் வெளியேற்றப்பட்டது குறித்து நிறைய கருத்துகள் பகிரப்பட்டன. ஆனால் எது குறித்தும் அவர் வாய் திறக்கவில்லை. கலைமாமணி விருது விழாவின் போது கூட அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்காமல் சென்றுவிட்டார்.

எதிர்பார்ப்பு
இந்த சூழலில் பிக் பாஸ் இறுதிப்போட்டியின் போது சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் இருவருமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. சிறப்பு விருந்தினர்களாகவும் பிக் பாஸ் வீட்டிற்கு அவர்கள் செல்லவில்லை. இது அவர்களது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பிக் பாஸ்
இந்நிலையில், பிக் பாஸ் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளாதது ஏன் என நடிகர் சரவணனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு அவர், ‘பைனலில் கலந்துகொள்ளாதது தனக்கு ஒரு விஷயமே இல்லை' என்றார். மேலும், ‘பிக் பாஸ் குறித்து எங்கும், எதுவும் பேசக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக' கூறினார்.

நிறைய உள்ளன
"பிக் பாஸ் பற்றி பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். பைனல்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது எல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை தாண்டி என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் உள்ளன.

ராதிகா ஜோடி
இப்போது நான் தேனியில் மருத படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். கிழக்கு சீமையிலே போன்று இது அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். நான் அண்ணனாகவும், ராதிகா தங்கையாகவும் நடிக்கிறோம். பாரதிராஜாவின் உதவியாளர் தான் இயக்குகிறார்.

ஆயிரம் பொற்காசுகள் படம்
இதைத் தவிர விதார்த்துடன் இணைந்து நான் நடித்துள்ள ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் நான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும்.

நடிப்பதில் கவனம்
மேலும் கழுகு சத்யசிவா இயக்கத்தில் பெல்பாட்டம் எனும் படத்தில் கிருஷ்ணாவுக்கு அப்பாவாக நடிக்கிறேன். இந்த படத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பமாக உள்ளன. இதில் எனது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும். தொடர்ந்து நிறைய படங்கள் வருகின்றன. இனி படங்களில் நடிப்பதில் மட்டும் தான் தீவிரமாக கவனம் செலுத்த உள்ளேன்", என படபடவென பேசினார் சரவணன்.


Click it and Unblock the Notifications











