இரண்டு திருமணம்.. இரண்டு விவாகரத்து.. ரஞ்சித் வாழ்க்கையில் நடந்த ட்விஸ்ட்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்து இருக்கும் நடிகர் ரஞ்சித் யார் என்று இன்றைய இளசுகளுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். அவர் பற்றி இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் ரஞ்சித் கே.எஸ். ராஜ்குமார் இயக்கிய பொன்விலங்கு படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, சிந்து நதி பூ,மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், பாரதி கண்ணம்மா படத்தில் சின்ன கேரக்டரில் நடித்து வந்த ரஞ்சித், மறுமலர்ச்சி படத்தில் வில்லனாக நடித்தார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததோடு, சிறந்த வில்லனுக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றுத்தந்தது.

நடிகர் ரஞ்சித்: அதன் பிறகு பல வெற்றிப்படத்தில் நடித்த இவர், பீஷ்மர் என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்து இருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்ததை அடுத்து பணப்பற்றாக்குறையால் ரஞ்சித்தால் அடுத்த படத்தை எடுக்கமுடியாமல் போனது. இதைத்தொடர்ந்து பட ஆண்டுகள் கழித்து நாடகக் காதலை எதிர்க்கும் வகையில் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
காதல் திருமணம்: நடிகர் ரஞ்சித், நேசம் புதுசு என்ற படத்தில் நடிகை பிரியா ராமனுடன் சேர்ந்து நடித்த போது இருவரும் காதலித்தனர். இதையடுத்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஆதித்யா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இரண்டாம் திருமணம்: அதன்பின் ரஞ்சித் சீரியல் நடிகை ராகசுதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த மணவாழ்க்கையும் ஒரே ஆண்டில் முடிந்துபோனது. இதையடுத்து, தனிமையில் பல ஆண்டுகள் இருந்த ரஞ்சித், மீண்டும் தனது முதல் மனைவியான நடிகை பிரியா ராமனுடன் சேர்ந்தார். தங்களின் விவாகரத்தை ரத்து செய்வதாக கூறி, அவர்களின் திருமண நாளிலேயே போட்டோவை வெளியிட்டு இணைந்தனர்.
பிக் பாஸ் வீட்டில் : தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கும் ரஞ்சித், தன்னை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தது தனது மனைவி தான் என பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருந்தார். வீட்டில் இவர் சிறப்பாக விளையாடி வந்தாலும், இவர் உண்மையாக இல்லை என்றும், அவரின் பேச்சு, நடவடிக்கை என அனைத்தும் போலித்தமாக இருப்பதாக இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











