“அன்னைக்கு ரொம்ப உணர்ச்சிவச பட்டுட்டேன்.. அதனாலதான்..” பிக் பாஸ் மதுமிதா வெளியிட்டுள்ள புதிய வீடியோ!
Recommended Video
சென்னை: செய்தியாளர்களைச் சந்தித்த அன்று அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விட்டதாலேயே தேவையில்லாமல் நிறைய விசயங்களைப் பேசி விட்டதாகத் தெரிவித்துள்ளார் பிக் பாஸ் மதுமிதா.
இம்முறை பிக் பாஸ் டைட்டிலை வெல்லும் அளவிற்கு மக்களிடையே ஆதரவைப் பெற்றிருந்தவர் நடிகை மதுமிதா. ஆனால், பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன் கையை அறுத்துக் கொண்டதால் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இது அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் ஆளாக்கியது. அதோடு அந்த விவகாரம் முடிந்து விடவும் இல்லை.

விளக்கம்
மதுமிதா சம்பளம் கேட்டு தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என மிரட்டுவதாக விஜய் டிவி அவர் மீது புகார் அளித்தது. அதுவரை ஊடகங்களைச் சந்திக்காமல் இருந்த மது அப்போது முதன்முறையாக சந்தித்தார். ஆனால், அப்போதும் சம்பவத்தன்று என்ன நடந்தது என அவர் கூறவில்லை.

செய்தியாளர் சந்திப்பு
அதற்குப் பதில், விஜய் டிவி ஒருநாள் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யும், அப்போது விளக்கமாகக் கூறுகிறேன் என்றார் மது. ஆனால், அப்படி எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதனைத் தொடர்ந்து விஜய் டிவிக்கு எதிராக அவர் தபால் மூலம் ஒரு புகார் அளித்தார். இறுதியில் ஒரு நாள் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

சர்ச்சைப் பேச்சு
அதில் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசிய மது, இந்த விவகாரத்தில் கமல் தலையிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், பிக் பாஸ் வீட்டில் அபிராமி மற்றும் சாக்ஷி ஆகியோர் உடை அணியும் முறை பற்றியும் அவர் பேசியது சர்ச்சையில் சிக்கியது. மதுவின் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் வாதிட்டனர்.

நேரலை
மது தனது புகாரில் கூறியுள்ளபடி, இனி வாழ்நாளில் மது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியே பேசக்கூடாது என விஜய் டிவி கூறுகிறதா, அல்லது காண்ட்ராக்ட்டில் அது உள்ளதா எனத் தெரியவில்லை. அவர் இதுவரை தனிப்பட்ட முறையில் யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. ஆனால், அவர் சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாகவாவது நேரலையில் பேச வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
புதிய வீடியோ
தொடர்ந்து ரசிகர்கள் இதனை நச்சரித்து வருவதால், மது தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ரசிகர்கள் என்னை சமூகவலைதளங்களில் லைவ் செய்யச் சொல்கிறார்கள். ஆனால், நான் எந்த சமூகவலைதளப் பக்கத்திலும் தற்போது இல்லை. பிக் பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி எனக்கு ஆதரவளித்த அனைவருக்குமே இந்த வீடியோ மூலமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மன அழுத்தம்
அன்றைக்கு செய்தியாளர் சந்திப்பில் நான் பேசிய விசயங்கள் அனைத்துமே உண்மை. ஆனால், அன்று சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். அது ஏனென்றால், பொதுவாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்பவர்களுக்கு தீவிர மன உளைச்சல் ஏற்படுவது வழக்கம். எனக்கு நடந்த விசயங்களால் என் மன அழுத்தம் மேலும் அதிகமானது.

பிக் பாஸ் தாக்கம்
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு வந்தபிறகும் கூட சுமார் 20 நாட்களுக்கு அதன் தாக்கம் இருந்தது. வழக்குகள், நலம் விசாரிப்புகள் என ஏகப்பட்ட விசயங்கள் வெளியில் நடந்தது. அந்த சூழ்நிலையில் முதன்முறையாக மக்களைச் சந்தித்து பேசப்போகிறேன் என்றதும், என்னை அறியாமல் எனக்குள் இருந்த விசயங்கள் எல்லாம் வெளியில் வந்து விட்டது.

நன்றி
இப்போது நன்றாகவே குணமடைந்து வருகிறேன். மனதளவில் இன்னமும் கொஞ்சம் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. விரைவில் அதுவும் சரியாகி விடும் என நம்புகிறேன். படப்பிடிப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டேன். எனக்காக வருத்தப்பட்ட அனைவருக்கும் நன்றி" என இவ்வாறு அதில் மதுமிதா பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











