பிக் பாஸ் சர்ச்சை.. மறைக்கப்படும் உண்மைகள்.. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும் மது!
மதுமிதா, சரவணன் உள்ளிட்டோர் வெளியில் வாய் திறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுடைய சம்பளப் பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: மதுமிதா, சரவணன் உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து வெளியில் தெரிவிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அதிரடியாக வெளியேற்றப்பட்டவர்கள் யாரும் உடனடியாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கவில்லை. காலம் தாழ்த்தி பேட்டி கொடுத்தாலும் சர்ச்சைக்குரிய விஷயங்களை நாசுக்காக மறுத்துவிடுகின்றனர். இம்முறை சரவணன் மற்றும் மதுமிதா இதற்கு விதிவிலக்கு இல்லை.
பெண்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக கூறி பிக் பாஸில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிரடியாக வெளியேற்றப்பட்டார் சரவணன். அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டப் பிறகும் கூட நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விளக்கம் அளிக்காத சரவணன்
இதுதொடர்பாக சரவணன் உரிய விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரவணனும் சரி, கமலும் சரி இது பற்றி எதுவும் பேசவில்லை. கலைமாமணி விருது வாங்க வந்த போது கூட சரவணன் மீடியாக்களை தவிர்த்துவிட்டார்.

பேட்டி கொடுக்காத மதுமிதா
இதேபோல் தன்னை தானே காயப்படுத்திக்கொண்டதாக கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட மதுமிதாவும் இதுவரை ஊடகங்களை சந்திக்கவில்லை. ஆனால் அவருக்கு பின்னர் வெளிவந்த அபிராமி பேட்டி கொடுத்து வருகிறார்.

முடக்கப்படும் சம்பளம்
இதன் மூலம் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சையில் சிக்குபவர்களுக்கு மட்டும் உடனடியாக பேட்டி எதுவும் கொடுக்கக் கூடாது என விஜய் டிவி நிர்வாகம் தடைவிதித்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதோடு சம்மந்தப்பட்டவர்களின் சம்பளப் பணத்தையும் அந்த தொலைக்காட்சி உடனே கொடுப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. சம்மந்தப்பட்ட சர்ச்சை ஓய்ந்தபிறகு தான் அவர்களுடைய சம்பளப் பணம் செட்டில் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

மிரட்டும் மதுமிதா
இந்த சூழ்நிலையில் உடனடியாக தனது சம்பளப் பணத்தை கேட்டு மதுமிதா விஜய் டிவியை நச்சரித்து வருவதாகவும், இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசில் விஜய் டிவி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அணைத்து வைக்கப்பட்ட செல்போன்
இதுகுறித்து விளக்கம் கேட்க மதுவின் தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அவரது எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் டிவியிடம் இருந்து சம்பள பாக்கியை பெறும்வரை எந்த சர்ச்சையிலும் சிக்க வேண்டாம் என மதுமிதா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











