ரொம்ப அதிர்ச்சியாவும் வெட்கமாவும் இருக்கு.. பிக்பாஸ் அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி வேதனை!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள யூடியூபர் அபிஷேக் ராஜாவின் மனைவி சமூக வலைதளத்தில் தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 10 பெண் போட்டியாளர்கள் 7 ஆண் போட்டியாளர்கள் ஒரு திருநங்கை ஆவார்.

யூட்யூபர் அபிஷேக் ராஜா
இதில் சிலர் தெரிந்த முகங்களாகவும் பலர் தெரியாத முகங்களாகவும் உள்ளனர். அந்த வகையில் யூடியூபர் அபிஷேக் ராஜா பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். யூட்யூப் சேனலை நடத்தி வரும் அபிஷேக் ராஜா, இதற்கு முன்பு பலமுறை செய்திகளில் அடிப்பட்டு வருகிறார்.

பார்த்தாலே இரிட்டேட் ஆகுது
நிகழ்ச்சி தொடங்கி மூன்று நாட்களுக்குள்ளேயே அவர் பேசுவது இரிட்டேட்டாக உள்ளது என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. அந்த அளவுக்கு ஓவராக பேசி வருகிறார் அபிஷேக் ராஜா. இதனிடையே ஏற்கனவே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வெளியிட்ட வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

முதல் ஆளாக இசைவாணி
முதல் நாள் எபிசோடில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றம் அதற்கு ஏற்றது போல், ஹார்ட், லைக், டிஸ்லைக் போன்ற ரேட்டிங் கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் பிக்பாஸ். இந்த டாஸ்க்கில் முதல் ஆளாக இசைவாணி தனது கதையை பகிர்ந்தார்.
Recommended Video

கதறிய அபிஷேக் ராஜா
அதனை தொடர்ந்து கார்டன் ஏரியாவில் சக போட்டியாளர்களுடன் பேசினார் அபிஷேக் ராஜா. அப்போது சக போட்டியாளர்களின் முகத்தை பார்த்து அவர் எப்படிப்பட்டவர் என்று சொல்கிறேன் என கூறி, ஒவ்வொருவர் குறித்தும் பேசினார். பின்னர் திடீரென தனது அம்மா ஞாபகம் வந்துவிட்டதாக கூறி கதறி அழுதார்.

முன்னாள் மனைவி கோபம்
மேலும் தனது விவாகரத்தால் அம்மா ரொம்பவே வேதனை படுகிறார் என்றும் பேசி கண்ணீர் வடித்தார். என் அம்மாவை ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டேன் என்றும் கூறி மொத்த ஹவுஸ்மேட்ஸையும் விழி பிதுங்க வைத்தார். இந்நிலையில் அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவியான தீபா நடராஜன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

ஒரு நாள் அல்லது ஒரு வாரம் வீணாகும்
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, எல்லோருக்கும் வணக்கம், நாமே தேர்ந்தெடுத்த ஒரு விஷயம் நமக்கு மோசமாக அமைந்து விட்டால் அதில் இருந்து வெளியேறுவது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். சில பேர் அந்த விஷயங்களை பற்றி கிளறுவதால், பேசுவதால் அந்த நினைவுகள் நம்முடைய ஒருநாள் அல்லது வாரத்தையே வீணாக்கும்.

என்னுடைய தனிப்பட்ட விருப்பம்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் என் திருமண வாழ்க்கையில் இருந்து விலகி விவாகரத்து செய்ய முடிவு செய்தேன். அது என் சொந்த முடிவு. அதுபோல அதன் பின்விளைவுகளையும் நானே சந்தித்து வருகிறேன். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம்.. என பதிவிட்டுள்ளார்.

அதிர்ச்சியாகவும் வெட்கமாகவும் உள்ளது
மற்றொரு பதிவில் அபிஷேக்குடன் திருமணம் ஆன புதிதில் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது என்றும் அதனை நீக்குமாறு கூறியும் யூட்யூப் சேனல்கள் நீக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, "இன்றைய ஊடகங்களின் வியாபார யுக்தியை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைகிறேன். வெட்கப்படுகிறேன்.

வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது
வீடியோவின் தலைப்பை மட்டுமே மாற்றியுள்ளனர். எனது பழைய பதிவுகளை தற்போது வெளியிட்டு அதன் மூலம் கவனத்தை பெற முயற்சிக்கிறார்கள் என்பது எனக்கு வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. மேலும் இதுபோன்ற கீழ்த்தரமான வேலைகளை நிறுத்துங்கள்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார். தீபாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











