Bigg Boss Day 1: சுயநல ஜாக்குலின்.. தவளை சாச்சனா.. முதல் வார எவிக்ஷனில் சிக்கிய 6 பேர்!
சென்னை: விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 6ம் தேதி மாலை பிரம்மாண்டமாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கியது. கமல்ஹாசன் இடத்தில் விஜய் சேதுபதியை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என சொல்லிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு நான் வாலி போல எந்த இடத்துக்கு செல்கிறேனோ அந்த இடத்தின் பலத்தை அடைந்து விடுவேன் என விஜய் சேதுபதி பிக் பாஸ் மேடையையும் தனதாக்கிக் கொண்டார்.
கமல்ஹாசன் தான் சீனியர் என்பதால் போட்டியாளர்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை என இருந்தது. ஆனால், விஜய் சேதுபதி தன்னை விட சீனியர்களான தீபக் மற்றும் ரஞ்சித்தை ஆரம்பத்திலேயே டீல் செய்த விதத்திலேயே தனது கெத்தை காட்டி விட்டார்.

மேலும், கடைசியாக என்னோட ஆட்டத்தை ஆடுறேன் பாருங்க என 24 மணி நேரத்தில் விஜய் சேதுபதி போட்ட எவிக்ஷன் வெடிகுண்டு அவரது ரீல் மகள் சாச்சனாவை பாதிக்கும் என்பதை அவர் அறிந்திருப்பாரா என்பதே டவுட் தான் என்கின்றனர். பிக் பாஸ் துவக்க விழாவை தாண்டி முதல் நாளில் வீட்டில் என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்த ரவுண்ட்டப்பை இங்கே காணலாம்.
பிக் பாஸ் வீட்டில் முதல் நாள்: பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ போட்டியாளர்களாக உள்ளே 18 பேர் நுழைந்துள்ளனர். ரவீந்தர் சந்திரசேகர், சச்சனா, தர்ஷா குப்தா, தீபக், சுனிதா கோகோய், சத்யா, விஜே விஷால், அர்ணவ், ரஞ்சித், அன்ஷிதா, செளந்தர்யா, அருண், பவித்ரா ஜனனி, ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, தர்ஷிகா, முத்துகுமரன் மற்றும் ஜாக்குலின் என 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். அதில், ஆண்கள் மற்றும் பெண்கள் என பிரிக்கப்பட்டு இந்த சீசன் நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளிலேயே முதல் எவிக்ஷனும் நடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தவளை சாச்சனா: தவளை தன் வாயால் கெடும் என்பதை போல சாச்சனா பொதுநலத்துடன் சொன்ன ஒரு வார்த்தை அவரை மற்ற திமிங்கலங்கள் குட்டி மீனை தின்று குவிப்பது போல காலி செய்து வெளியே அனுப்ப வைத்து விட்டது. பிக் பாஸ் ஒரு மைண்ட் கேம் என்பதை சாச்சனா வெளியே வந்து புரிந்துக் கொள்வாரா? அல்லது நிகழ்ச்சியின் டிஆர்பியை அதிகரிக்க இது ஏற்கனவே செட்டப் செய்யப்பட்ட ஒன்றா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. மகாராஜா படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் சாச்சனா பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுயநல ஜாக்குலின்: சாச்சனாவை நாமினேட் செய்யவில்லை என்றால் பிக் பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேறிவிடுவேன் என்கிற அச்சம் காரணமாக விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி அந்த சிறு பெண்ணை நாமினேட் செய்து வெளியே அனுப்ப நினைத்த நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் அதிக வாக்குகளை பெற்று டேஞ்சர் ஜோனுக்கு ஜாக்குலின் சென்றுள்ளார்.
ரவீந்தரா? ரஞ்சித்தா?: இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனில் ரவீந்தர், ஜாக்குலின் அதிக வாக்குகளுடன் நாமினேட் ஆன நிலையில், அடுத்ததாக ரஞ்சித், செளந்தர்யா, முத்துக்குமரன் மற்றும் அருண் பிரசாத் உள்ளிட்டோர் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த 6 பேரில் இந்த வாரம் எலிமினேட் ஆகப் போவது ரவீந்தரா? ரஞ்சித்தா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஜாக்குலினை எப்படியும் விஜய் டிவியே காப்பாற்றி விடும் என்று கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











