கஞ்சா, குடி, ரவுடி பாடல் பாடமாட்டோம்னு சொல்லுங்க.. டிரெண்டாகும் பிக்பாஸ் கானா வினோத்தின் வீடியோ!
சென்னை: தமிழ்நாட்டுக்கே பதற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வு, வடமாநில கூலித் தொழிலாளி, சிராஜை, போதையில் இருந்த தமிழ்நாட்டு சிறார்கள் நால்வர் இணைந்து கடுமையாக தாக்கியது தான். பட்டா கத்தியுடன் தாக்கியது மட்டும் இல்லாமல், அதனை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தனர். இந்த வீடியோ வெளியான பின்னர்தான், இப்படி ஒரு கோர சம்பவம் நடைபெற்றது என்பது வெளிச்சத்திற்கு வந்தது. இப்படி இருக்கும்போது, இந்த சம்பவம் தொடர்பாக திரைப் பிரபலங்கள் தொடங்கி, அரசியல் கட்சித் தலைவர்கள் வரை அனைவரும் ரியாக்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் போட்டியாளராக பங்கு பெற்று, டாப் 9 போட்டிகளில் ஒருவராக உள்ள, கானா வினோத் தன்னைப் போல, கானா பாடல்கள் பாடும் கானா பாடகர்களிடம் இனி வரும் காலங்களில் கஞ்சா பாடல், ரவுடி பாடல், குடி பாடல் போன்ற வற்றை பாடக்கூடாது என்று, பேசும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, சமூக வலைதளத்தில் இணையவாசிகள் பலரும், குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவர்களின், தலைமுடிக்கு நிறங்கள் பூசியுள்ளதை மிகவும் முக்கியமான அடையாளமாக குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர். இது மட்டும் இல்லாமல், இப்படியானவர்களை காவல்துறை தனித்து கவனம் செலுத்த வேண்டும் என்று எல்லாம் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நிரந்தர தீர்வு: ஆனால் நிதர்சனத்தில், இப்படி ஒரு சம்பவத்திற்கு சமூகமாக பொறுப்பு ஏற்பதே சரியானதாக இருக்கும். மேலும் தலைமுடிக்கு நிறம் அடித்து உள்ளவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் மனப்பான்மை என்பது அறியாமை மற்றும் நிரந்தர தீர்வை நோக்கி நகர முயற்சிக்காமல், உடனடி தீர்வுக்கு காரணங்களை கண்டுபிடிப்பவர்களின் பிரதிபலிப்புதான் மேற்குறிப்பிட்ட வாதங்கள்.

சமூக பொறுப்பு: ஆனால், இந்த சம்பவத்திற்கு சமூகமாக பொறுப்பு ஏற்பது தான் சரி. வடக்கன் என்ற இளக்கார மனநிலையை ஒரு சமூகமாக நாம் வளர்த்து எடுத்துள்ளோம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். தலையில் நிறமிகளை பூசிக்கொள்பவர்கள்தான் குற்றவாளிகள் என்றால், நீதிமன்றத்திற்கு வரும் பெரும்பாலான குற்றவாளிகள், தங்களது தலை முடியில் எந்த நிறத்தையும் பூசிக்கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கானா வினோத்: இந்த சம்பவம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9இஒல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ள, கானா வினோத், தன்னைப் போன்ற கானா பாடகர்கள் மத்தியில் பேசிய பழைய வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. அதாவது அந்த வீடியோவில், " கச்சேரி பாடப்போகும் உங்களை யாராவது, கஞ்சா பாடல், ரவுடி பாடல் மற்றும் போதை பாடலை பாடச் சொன்னால் பாடாதீர்கள். உங்களை அடித்தால் கூட அடி வாங்கிக் கொள்ளுங்கள். என்னை அப்படி பாடச் சொன்ன போது நான் மைக்கை மேடையிலேயே வைத்து விட்டு வந்துள்ளேன். எனவே எக்காரணம் கொண்டும் இப்படியான பாடல்களைப் பாட வேண்டாம். இதற்கு முன்னர் பாடி இருந்தால் பரவாயில்லை, இனி வரும் காலங்களில் அப்படியான பாடல்களைப் பாட வேண்டாம் என்று பேசுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











