அத்துமீறிய அர்ச்சனாவுக்கு அபராதம்.. வீடியோ போட்டு தனக்கு தானே சூனியம் வச்சுக்கிட்டாங்களே
சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது, வனத்துறை கட்டுப்பாடுகளை மீறி ஏறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மொத்தம் 2,668 அடி உயரமுள்ள இம் மலையின் மீதான தடை உத்தரவை மீறி, பிக்பாஸ் சீசன் 7 வெற்றியாளரும் சின்னத்திரை நடிகையுமான அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் அவரது காதலர் அருண் ஏறியதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அவர்களே வீடியோவும் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் இவர்களை விசாரித்த வனத்துறை, அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
ஆன்மிகச் சிறப்புமிக்க அண்ணாமலையார் மலையில் ஏறுவதற்கு வனத்துறை நிரந்தரமாகத் தடை விதித்துள்ளது. பௌர்ணமி நாட்களில் மட்டுமே மலையைச் சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற நாட்களில் வனத்துறையின் முன் அனுமதி இல்லாமல் மலைப்பகுதிக்குள் நுழையவோ, ஏறவோ முடியாது. இன்னும் சொல்லப்போனால் மலை ஏறவே கூடாது.
இப்படி இருக்கையில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன், சில தினங்களுக்கு முன் வனத்துறை அனுமதி பெறாமல் மலை ஏறி, உச்சி வரை சென்று வந்துள்ளார். தான் மலை ஏறிய அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார். அதில், "மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும், இருள் சூழ்ந்ததால் மிகுந்த அச்சம் அடைந்ததாகவும்" குறிப்பிட்டிருந்தார்.

விதிமீறல்: மேலும், "மலையேற்றம் செய்கிறீர்கள் என்றால் சீக்கிரமாகவே தொடங்குங்கள், எப்போதும் சூரியன் மறைவதற்கு முன் இறங்குவதை திட்டமிடுங்கள்" என்றும் அவர் தனது பதிவில் அறிவுறுத்தினார். வனத்துறை தடையை மீறியது ஒருபுறம் இருக்க, பிறரையும் மலை ஏற ஊக்குவிப்பது போன்ற அவரது சமூக வலைதள பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மேலும் அர்ச்சனாவுடன் அவரது காதலர் அருண் மலை ஏறியுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் வனத்துறை விதிகளை மீறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அபராதம்: இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, அர்ச்சனா ரவிச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த மலையேற்ற வீடியோக்களையும் புகைப்படங்களையும் உடனடியாக நீக்கினார். இதையடுத்து, வனத்துறை தடை உத்தரவை மீறி மலை ஏறியது மற்றும் சமூக வலைதள பதிவு குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் இருவரும் மலையேறியதை ஒப்புக் கொண்டனர். மேலும் இனி வரும் காலங்களில் இது போல செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தனர். இதனால் இருவருக்கும் தலா ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி உள்ளது வனத்துறை. இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்ட தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











