Bigg Boss: நான் வாங்கிய பிக் பாஸ் கோப்பையின் சிறப்புகள்.. பட்டியலிட்ட முத்துக்குமரன்! இவ்வளவு இருக்கா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் டைட்டிலை முத்துக்குமரன் வென்றார். இவருக்கு பலரும் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தான் என சீசன் முடிவதற்கு முன்னர் இணையத்தில் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். எலிமினேட் ஆன சக போட்டியாளர்களே முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் எனத் தெரிவித்தனர். அதேபோல் முத்துக்குமரன் டைட்டிலைத் தட்டித் தூக்கினார். இப்படியான நிலையில் முத்துக்குமரனுக்கு வழங்கப்பட்ட பிக் பாஸ் கோப்பை, வசீகரமாக இல்லை என பலரும் கமெண்ட் அடித்தனர். இந்நிலையில், பிக் பாஸ் டைட்டிலை வென்ற பின்னர், முத்துக்குமரன் அளித்த பேட்டியில், தான் வாங்கிய கோப்பை தொடர்பாக பேசியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி, தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. குறிப்பாக இந்த சீசன் தான் மற்ற சீசன்களை விட பொறாமை குணம் இல்லாத சீசன் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்த சீசனில் டாப் 8 போட்டியாளர்களுமே கோப்பைக்குத் தகுதியானவர்களாக கருதப்பட்டனர். மற்ற போட்டியாளர்கள் வெளியே சென்றதை விடவும், இவர்கள் வெளியேறும் போது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இப்படியான நிலையில் இந்த சீசனை வென்ற முத்துக்குமரனுக்கு, வழங்கப்பட்ட கோப்பை, ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தைப் பெற்றது. அதாவது இதற்கு முன்னர் வழங்கப்பட்ட கோப்பைகளை விடவும், இந்த சீசன் டைட்டில் வின்னர் முத்துக்குமரனுக்கு வழங்கப்பட்ட, கோப்பை வசீகரமானதாக இல்லை என கூறுகின்றனர்.
பிக் பாஸ் கோப்பை: இதற்கு முத்துக்குமரன் பதில் அளித்துள்ளார். மேலும் தனக்கு வழங்கப்பட்ட டைட்டில் கோப்பையின் சிறப்புகள் குறித்தும் தெரிவித்துள்ளார். அதாவது, " நான் இந்தக் கோப்பையை வீட்டிற்குள் காட்டும்போதுதான் முதல் முதலாக பார்த்தேன். அது தங்க முலாம் பூசப்பட்டதா? வெள்ளியால் செய்யப்பட்டதா? என நான் யோசிக்கவில்லை. பல கோடி மக்களின் அன்பு அது. பலர் டிராஃபி அழகாக இல்லை எனக் கூறுகின்றார்கள். ஆனால் டிராஃபி மிகவும் அழகானது.

பாரம்பரியம்: இதற்கு முன்னர் வழங்கப்பட்ட கோப்பைகள் அனைத்தும் ஏதோ ஒரு உலோகத்தால் செய்யப்பட்டவை, ஆனால் எனக்கு கொடுக்கப்பட்ட கோப்பை ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பிள்ளையார் பட்டியில், குடவரைக் கோவில்கள் உள்ளன. அதன் சிறப்பே ஒரே பாறையைக் குடைந்து சிற்பங்கள் செய்வதுதான். இது நம் பாரம்பரியம். மற்ற நாடுகளை விடவும், நமது ஊரில் தான் கலைச் சிற்பங்கள் சிறப்பாக உள்ளது. யாழி தொடங்கி, பெண்களின் ஜடை வரை ஒரே கல்லில் செதுக்கியுள்ளனர். அதனை பல நாடுகளில் இருந்து வந்து ரசித்துச் செல்கின்றனர். நமது பாரம்பரியத்தோடு செய்யப்பட்ட கோப்பையாக பார்க்கின்றேன். அந்தக் கோப்பையை நீங்கள் தூக்கவே முடியாது. அந்த அளவுக்கு கனம்.
கலைத்துவம் : மிகவும் அழகாக இருக்கு. தங்க முலாம் பூசிக் கொடுத்திருந்தால் கூட இந்த அளவுக்கு இருக்காது. நமது பாரம்பரியத்தோடு கொடுத்ததால்தான் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கேமராவில் அது எந்த அளவுக்கு போய் மக்களிடம் சேர்ந்தது எனத் தெரியவில்லை. ஆனால் 8 சீசன்களிலும் எனது டிராஃபிதான் மிகவும் கலைத்துவம் வாய்ந்த டிராஃபி" என பதில் அளித்துள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட ரசிகர்கள் தற்போது ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











