எனக்குள்ளும் மிருகம் இருக்கிறது டெரரான போட்டோவை போட்டு தெறிக்கவிட்ட பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் குரலுக்கு சொந்தக்காரரான சாஷோ சதீஷ் சாரதி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும், அந்த போட்டோவுக்கு அவர் கொடுத்திருக்கும் கேப்ஷன் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 எப்போது தொடங்கும் என்றும் அதற்கு வாய்ப்பிருக்கிறதா என பலரும் அவரிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் குரல்
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கூட முகத்தை காட்டாமல் வெறும் குரலாகவே அந்த நிகழ்ச்சியில் ஒலித்து வருபவர் நடிகர் சதீஷ் சாரதி சாஷோ தான். இவர் தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் என்பதை ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக தேடி அடையாளம் கண்டு கொண்டனர். சாஷோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடர்ந்து பலர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

படங்களில் நடித்துள்ளார்
பாலிவுட்டில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான மஞ்சுநாத் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சாஷோ. தொடர்ந்து, பி.ஏ. பாஸ் 2 மற்றும் கஹானிபாஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பின்னர், எண்ட்மோல் ஷைன் இந்தியாவில் இணைந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

பிக் பாஸுக்கு தடை
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இயங்கி வரும் இவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான செட் போடப்பட்டு அதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற சில நடிகர்கள் உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில், அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதற்காக பிக் பாஸ் வீடு மொத்தமும் சீல் வைக்கப்பட்டு அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி தொடங்கி, இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி கிராண்ட் ஃபினாலேவுடன் நிறைவுற்றது. இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 5க்கான ஆரம்ப வேலைகள் மற்றும் போட்டியாளர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் இன்னமும் தொடங்கப்படாமலே உள்ளன.

எனக்குள்ளே மிருகம்
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்குள்ளே மிருகம் இருக்கிறது, எனக்குள்ளே பயம் இருக்கிறது, எனக்குள்ளே இருள் இருக்கிறது, எனக்குள்ளே அழுகை இருக்கிறது என பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரான சாஷோ பதிவிட்டுள்ள போஸ்ட் வைரலாகி வருகிறது.

எப்போது துவங்கும்
எப்போதாவது இதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வரும் சதிஷ் சாரதியிடம் ரசிகர்கள், ஜூன் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 5 எப்போது துவங்கும் என்றும், இந்த ஆண்டு அடுத்த சீசன் ஒளிபரப்பாக வாய்ப்பு இருக்கா? இல்லையா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

டோட்டல் அமைதி
கொரோனா இரண்டாம் அலையின் கோரத் தாண்டவத்தால் புதிய சீரியல்களின் படப்பிடிப்புகளே எப்போது துவங்கும் என தெரியாத நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இந்த ஆண்டு நடத்த பட வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், எந்தவொரு விளம்பர பணிகளையும் சமூக வலைதள சர்ச்சைகளையும் கூட பிக் பாஸ் குழு இன்னமும் ஆரம்பிக்காமல் டோட்டல் அமைதியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











