பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை!
சென்னை: நடிகர் சுஷாந்தின் மரண வழக்கை விசாரிக்க பீகார் அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது.
Recommended Video
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுக்க ரசிகர்களை பெற்றார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலிவுட்டில் உள்ள கேங்க் அரசியலே சுஷாந்த் சிங் மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

தந்தை புகார்
பட வாய்ப்புகள் இல்லாததும் ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்து சுஷாந்த் சிங் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அதிரடி திருப்பமாக சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி மீது அவரது தந்தை போலீஸில் புகார் அளித்தார்.

பீகார் போலீஸ்
இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி தலைமையில் பீகார் போலீசார் மும்பை வந்தனர்.

டிஜிபி காட்டம்
ஆனால் அவர்களை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை கட்டாய தனிமை படுத்தியது மும்பை போலீஸ். மேலும் மும்பை வந்த பாட்னா போலீசாருக்கு மும்பை போலீஸார் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பீகார் டிஜிபி பாண்டே மும்பை போலீஸின் இந்த நடவடிக்கைக்கு காட்டமாக பதில் தெரிவித்துள்ளார்.

ஏதோ தவறு உள்ளது
இதுதொடர்பாக பேசிய அவர் அவர்கள் ஒரு ஐபிஎஸ் அதிகாரியை வலுக்கட்டாயமாக தனிமைப் படுத்தியுள்ளனர். மகாராஷ்டிரா அரசு தங்கள் போலீஸைப் பற்றி பெருமிதம் கொள்கிறது என்றால், சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த 50 நாட்களில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று சொல்லுங்கள். எங்களுடன் அனைத்து தகவல் தொடர்பு சேனல்களையும் மும்பை மூடியுள்ளது. இது இதில் ஏதோ தவறு இருக்கிறது என்பதையே காட்டுகிறது என சாடியிருந்தார்.

சிபிஐ விசாரணை
இந்நிலையில் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனிடையே பீகார் போலீஸை விசாரிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதே சிபிஐ விசாரிக்க பரிந்துரை காரணம் என கூறப்படுகிறது. ஏற்கனவே சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் சுஷாந்தின் தந்தையும் பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் கோரிக்கை விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











