வேலூரில் விஜய் கூட்டம்.. இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள அசம்பாவிதம் ஸ்டார்ட் ஆகிடுச்சு
வேலூர்: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்திருக்கும் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மக்களையும், நிர்வாகிகளையும் சந்தித்துவருகிறார். அந்தவகையில் இன்று வேலூரில் தவெகவின் கூட்டம் நடக்கவிருக்கிறது. முதன்முறையாக பந்தல் போடப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்திலாவது எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என அக்கட்சியின் தொண்டர்கள் வேண்டாத தெய்வம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் கூட்டம் ஆரம்பிக்கும் முன்னரே அசம்பாவிதம் ஆரம்பமாகிவிட்டது.
சினிமாவில் அதிகம் வியாபாரம் நடக்கக்கூடிய ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் விஜய் சில வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்ததிலிருந்து சில காலம் மக்களை சந்திக்காமலேயே இருந்தார். அது பெரிய விமர்சனங்களையும், கிண்டல்களையும் சந்தித்தது. அதனையடுத்து 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க ஆரம்பித்தார்.
கரூர் துயரம்: அப்படி அவர் கரூருக்கு சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் கொத்து கொத்தாக உயிரிழந்தார்கள். விஜய்யின் தாமத வருகை, கூட்டத்தை சரியாக ஏற்பாடு செய்யாதது உள்ளிட்ட காரணங்கள்தான் அந்த உயிரிழப்புக்கு காரணம் என்ற பேச்சு எழுந்தது. அச்சம்பவம் விஜய்க்கு பெரிய கரும்புள்ளியை ஏற்படுத்தியது. அவ்விவகாரம் தொடர்பாக சிபிஐயும் விசாரணையை தொடங்கியது. விஜய்யும் நேரில் ஆஜராகி விளக்கமளித்துவிட்டு வந்தார்.

சேலத்திலும் உயிரிழப்பு: கரூர் சம்பவத்துக்கு பிறகு ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வைப்பார் என்றே கருதப்பட்டது. தொடர்ந்து சேலத்தில் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்திலும் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதுவும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ஒரு அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்துகொண்டு கூட்டத்தை எப்படி நடத்துவது என்றுகூட விஜய்க்கு தெரியவில்லை; இவரெல்லாம் எப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் காப்பாற்றப்போகிறார் என்று விமர்சன அம்புகளை எய்தார்கள். மேலும் தன்னை பார்க்க வரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் பந்தல் போடுவது, தண்ணீர் வைப்பது, நாற்காலி போடுவது போன்ற அடிப்படை வசதிகளைக்கூடவா செய்யமாட்டார் எனவும் விளாசினார்கள்.
வேலூரில் கூட்டம்: சூழல் இப்படி இருக்க இன்று வேலூரில் தவெகவின் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் விஜய் பேசவிருக்கிறார். இந்த முறை அனைத்தையும் கவனத்தில் கொண்டு; பந்தல், நாற்காலிகள் எல்லாம் போடப்பட்டிருக்கின்றன. எனவே கண்டிப்பாக எந்த அசம்பாவிதமும் நடக்காது என்கிற நம்பிக்கையில் தவெக நிர்வாகிகள் நிம்மதியடைந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது.
என்ன நடந்தது?: அதாவது இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து வேலூருக்கு காரில் சென்றார் விஜய். அப்போது அவரை பார்க்கும் ஆர்வத்தில் சில இளைஞர்கள் அசுர வேகத்தில் பைக்கை ஓட்டி சென்றார்கள். அப்போது நிலை தடுமாறி நெடுஞ்சாலையில் விழுந்துவிட்டார்கள். நல்வாய்ப்பாக அவர்களது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அசம்பாவிதம் ஆரம்பித்துவிட்டதாக பலரும் கூற தொடங்கிவிட்டார்கள். இதெல்லாம் எப்போதுதான் நிற்குமோ?..


Click it and Unblock the Notifications