கிரவுட் ஃபண்ட் முறையில்.. இந்தி, தமிழ், தெலுங்கில் சினிமாவாகிறது.. சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை!
மும்பை: தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை கதை சினிமாவாக எடுக்கப்பட இருக்கிறது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
இது பாலிவுட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.

விசாரணை
அவர் மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து ஒருவாரம் ஆகியும் தற்கொலைக்கான காரணம் குறித்து பாந்த்ரா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி, மற்றும் சுஷாந்த்தின் நண்பர்கள், அவர் சிகிச்சை பெற்ற டாக்டர் உட்பட சிலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

வாழ்க்கை கதை
இந்நிலையில் மறைந்த சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை கதை சினிமாவாக எடுக்கப்பட இருக்கிறது. இதை இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாக்க உள்ளனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை நிகில் ஆனந்த் இயக்க உள்ளார். இதற்காக சுஷாந்தின் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து பேச இருக்கிறார்.

கிரவுட் பண்ட்
பொதுமக்களிடம் பணம் வாங்கி இந்தப் படத்தை உருவாக்க இருக்கிறார். அதாவது கிரவுட் பண்ட் முறையில் பணம் பெற இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு படத்தை வெளியிட திட்டம். இதுபற்றி நிகில் ஆனந்த் கூறும்போது, சுஷாந்த் இப்போது நம்முடன் இல்லை என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் உந்து சக்தியாக இருந்தவர்.

மகிழ்ச்சியாக இருப்பார்
சிறந்த மனிதர். மனிதநேயம் கொண்டவர். எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பார் என்றே நம்புகிறேன். இந்த படம் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும். சினிமாவில் அவரை என்றும் நிலைத்து நிற்க வைப்பது என் கனவு. இந்த படம் சினிமாவில் உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் மாற்றத்தைக் கொண்டு வரும் விதமாகவும் இருக்கும் என நம்புகிறேன். இதன் மூலம் திறமையானவர்களுக்கு பாலிவுட் முக்கியத்துவம் கொடுக்கும்' என்கிறார்.

உலகம் முழுவதும்
கொரோனா பிரச்னை முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பின் படத்துக்கான வேலைகள் தொடங்க இருக்கிறது. கதை மற்றும் நடிகர், நடிகை தேர்வில் படக்குழுவின் ஈடுபட இருக்கின்றனர். இந்தப் படம் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகும். அதிகமான ரசிகர்களை சென்றடைய உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் நிகில் ஆனந்த்.


Click it and Unblock the Notifications











