சும்மா அதிருதுல்ல.. பேக்ரவுண்ட் ஆர்ட்டிஸ்ட் டு பிரம்மாண்ட இயக்குநர்.. ஷங்கரின் சக்சஸ் ஸ்டோரி!
சென்னை: உலக அரங்கில் தமிழ் சினிமாவை கொண்டு சென்ற பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தளபதி விஜய்யின் அப்பாவும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷங்கர் ஒரு படத்தில் ஜனகராஜ் பேக்ரவுண்ட் ஆர்ட்டிஸ்ட்டாகவும் நடித்திருப்பார். அப்படி இருந்த அவர், ஜென்டில்மேன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
சமூக அக்கறை கொண்ட படங்களை தொடர்ந்து அதிக பொருட்செலவில் எடுத்து தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை பெரிய லெவலுக்கு கொண்டு சென்ற இயக்குநர் ஷங்கரின் சக்சஸ் ஸ்டோரியை இங்கே பார்ப்போம்.

ஷங்கர் பிறந்தநாள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் சண்முகம் - முத்துலட்சுமி தம்பதியினருக்கு மகனாக 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி பிறந்த சங்கர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கராக மாறி இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இயக்குநர் ஷங்கருக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மெக்கானிக்கல் இன்ஜினியர்
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் இயக்குநர்களாக கலக்கி வருகின்றனர். அவர்களுக்கு இவரும் ஒரு முன்னோடியாக உள்ளார். சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளோமோ படிப்பை படித்து முடித்த ஷங்கருக்கு கதை எழுதுவதில் பெரும் ஆர்வம் பிறந்தது.

சந்திரசேகர் பார்வையில் பட்ட சங்கர்
அப்படி சங்கர் எழுதிய ஒரு நாடகத்தை பார்த்த தளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான சந்திரசேகர் சங்கரை சினிமா உலகுக்கு கொண்டு வந்தார். துணை கதை ஆசிரியராகவும், உதவி இயக்குநராகவும் சந்திரசேகர் மற்றும் இயக்குநர் பவித்ரனிடம் பணியாற்றியுள்ளார் ஷங்கர்.

முதல் படம்
ராபின் ஹுட் கதைக் கருவை மையமாக வைத்து கல்வியில் அரசியல்வாதிகள் செய்யும் வியாபாரத்தை தோலுரித்துக் காட்டும் கதையை நடிகர் அர்ஜுனை வைத்து ஜென்டில்மேன் என்கிற டைட்டிலில் படமாக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். ஜென்டில்மேன் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு பாதை அமைத்துக் கொடுத்தது.

ஏ.ஆர். ரஹ்மான் காம்போ
இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் காம்போ எப்படி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக மாறியதோ அதே போல இயக்குநர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியும் மிகப்பெரிய ஹிட் அடித்தன. ஜென்டில்மேன் படத்திற்கு ரஹ்மான் போட்ட அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் அடிக்க, தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 என பல படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

மெகா பட்ஜெட் இயக்குநர்
திரைக்கதையில் பிரம்மாண்டம் காட்டிய இயக்குநர் ஷங்கர் நல்ல பொருட்செலவில் படத்தை தயாரித்தால் தான் தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல முடியும் என்பதை முழுமையாக நம்பினார். கமல் நடிப்பில் வெளியான இந்தியன், பிரசாந்தின் ஜீன்ஸ், அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் என அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களை இயக்க ஆரம்பித்தார் ஷங்கர். ரஜினிகாந்த் உடன் கூட்டணி வைத்த ஷங்கர் சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 உள்ளிட்ட படங்களை இந்திய சினிமாவே ஆச்சர்யப்பட்டு பார்க்கும் அளவுக்கு அதிக பட்ஜெட்டில் எடுத்து மிரட்டினார்.

டெக்னாலஜி பிரியர்
சமூக அக்கறை படங்களை தாண்டி டெக்னாலஜி படங்களை இயக்கும் ஆர்வத்தில் களமிறங்கினார் இயக்குநர் ஷங்கர். அதன் விளைவாக எந்திரன் மற்றும் 2.0 படங்கள் வெளியாகின. பாகுபலி மாதிரி வரலாற்று படங்கள் பக்கம் இதுவரை இயக்குநர் ஷங்கர் செல்லவில்லை. அப்படியொரு படத்தை எப்போது ஷங்கர் இயக்குவார் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதிக சம்பளம்
கோலிவுட் இயக்குநர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் என்றால் அது ஷங்கர் தான். சில முன்னணி நடிகர்களை விடவும் இயக்குநர் ஷங்கருக்கு சம்பளம் அதிகம் என்கின்றனர். புதிய படங்களுக்கு 20 முதல் 25 கோடி ரூபாய் வரை இயக்குநர் ஷங்கர் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியன் 2 சர்ச்சை
தொட்டதெல்லாம் பொன்னானது போல சக்சஸ் ஆக சென்று கொண்டிருந்த இயக்குநர் ஷங்கருக்கு இந்தியன் 2 விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியது. மீண்டும் கமலுடன் இணைந்து பணியாற்றிய ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டை தாண்டி
முதல்வன் படத்தின் வெற்றிக்கு பிறகு அதனை இந்தியில் நாயக் ஆக மாற்றினார் இயக்குநர் ஷங்கர். ஆனால், அங்கே அந்த படம் எடுபடவில்லை. அதன் பிறகு ஷூட்டிங்கிற்காக உலக நாடுகளில் வலம் வந்தாலும் ஹீரோக்கள் தமிழ் சினிமா நடிகர்களாகவே இருந்து வந்தனர். இந்நிலையில், இந்தியன் 2 விவகாரத்திற்கு பிறகு டோலிவுட் நடிகர் ராம்சரண் உடன் அடுத்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்குகிறார் ஷங்கர்.

ரன்வீர் சிங்
ராம்சரணை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளார் ஷங்கர். அந்நியன் 2வாக இருந்தால் தமிழ் ரசிகர்களும் அந்த படத்தை ரசித்து பார்ப்பார்கள் என்பது ஏகப்பட்ட கோலிவுட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதே போல விக்ரம் அளவுக்கு ரன்வீர் சிங் மிரட்டுவாரா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விஜய், அஜித்
நடிகர் விஜய்யை வைத்து 3இடியட்ஸ் ரீமேக்கை நண்பன் என எடுத்து இருந்தார் ஷங்கர். ஆனால், ஷங்கர் ஸ்டைலில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என தளபதி விஜய்யே மேடையில் கூறியிருந்தார். இன்னமும் அப்படியொரு கூட்டணி இதுவரை அமையவில்லை. அதே போல தல அஜித்தை வைத்து இயக்குநர் ஷங்கர் எப்போது படம் எடுப்பார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











