அஜித் - ஹீரா காதல் கதை உண்மையா?.. ரஜினி கொடுத்த அட்வைஸால் விலகினாரா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: அஜித்குமாருக்கு ஒன்றிய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்தது. அந்த விருதினை அவர் டெல்லியில் அவர் பெற்றுக்கொண்டார். சூழல் இப்படி இருக்க அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹீரா; அஜித் குறித்து சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலாவின. ஆனால் அவர் அப்படி சொல்லவே இல்லை; அந்த வலைதளமே அஜித்தை விரும்பாதவர்கள் போலியாக உருவாக்கி பரப்பியிருக்கிறார்கள் என்ற பேச்சுக்களும் எழ தொடங்கியிருக்கின்றன. இருப்பினும் இந்த விவகாரம் கோலிவுட்டில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது என்ற்தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
சினிமாவில் எவ்வித பின்னணியும் இன்றி முன்னணிக்கு வந்தவர் அஜித்குமார். ஏகப்பட்ட தடங்கல்கள், விபத்துகள், தோல்விகள் என அத்தனையையும் கடந்து விடாமுயற்சியோடு பயணித்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறார். அவர் திரைத்துறைக்கு வந்த 33 வருடங்களில் பல ஃப்ளாப்களை கொடுத்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் அவருடனேயே நிற்கும் ரசிகர்கள் அவருக்கு வாய்த்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தனது 50ஆவது படமான மங்காத்தா சமயத்தில் தன்னுடைய ரசிகர் மன்றத்தையும் கலைத்தார். இதனால் அவரது ஓபனிங் அடி வாங்கும் என்று பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அதற்கு நேர்மாறாக மன்றங்களை கலைத்த பிறகுதான் அவருக்கான மவுசு மேற்கொண்டு அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி: அவரது நடிப்பில் இந்த வருடம் இரண்டு படங்கள் வெளியாகின. அவற்றில் விடாமுயற்சி படம் தோல்வியை சந்தித்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த குட் பேட் அக்லி திரைப்படம் ஏகே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் பொதுவான ரசிகர்களிடம் போதிய ரெஸ்பான்ஸை பெறவில்லை. இந்த மாதிரியான படங்களில் நடிப்பதை அஜித் உடனடியாக நிறுத்திக்கொள்ளலாமே என்று அவருக்கு அறிவுரையும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். படம் சில விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் அந்தப் படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. அடுத்ததாகவும் அவர் ஆதிக் இயக்கத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

பத்மபூஷன் அஜித்குமார்: இதற்கிடையே நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங் என பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார் ஏகே. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஒன்றிய அரசு பத்மபூஷன் விருதினை அறிவித்தது. அதனையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் இருக்கும் ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் அந்த விருதை பெற்றுக்கொண்டார் அவர். அப்போது அங்கு அவரது மனைவி ஷாலினி, மகள் அனௌஷ்கா, மகன் ஆத்விக், சகோதரர் அனில் குமார் உள்ளிட்டோர் இருந்தார்கள்.ஏகேவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவர் விருது பெற்றுக்கொண்ட தினத்தன்று சமூக வலைதளங்களில் ஒரு விஷயம் தீயாக பரவியது.
ஹீராவின் குற்றச்சாட்டு: அதாவது அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹீராவின் வலைதளம் என்கிற பெயரில் இருந்த ஒரு வெப்சைட்டில், "என் மீது இளம் வயதில் திட்டமிட்டு சுமத்தப்பட்ட பழிகளால் மன உளைச்சலுக்கு நான் ஆளானேன். நான் ஒரு நடிகரை பல வருடங்களாக காதலித்தேன். ஆனால் அவரோ நான் ஏமாற்றுக்காரி, போதைக்கு அடிமையாகிவிட்டேன் என்றெல்லாம் பொய் பரப்புரை செய்து அசிங்கப்படுத்தினார். என்னுடைய இளம் வயதில் நான் ஒரு நடிகரை காதலித்தேன். அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்திருந்தபோது அவருக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்தேன். அவர் படுத்த படுக்கையாக இருந்தபோது அவரது Bedpan உள்ளிட்டவைகளையெல்லாம் மாற்றினேன். ஆனால் அந்த அறுவை சிகிச்சையிலிருந்து அவர் மீண்ட பிறகு அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அந்த ஒரே இரவில் அவர் கொடுமையான மனிதராக மாறினார்" என ஹீரா கூறியிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த நடிகர் அஜித்தா?: அந்தப் பதிவு பரவ தொடங்கியதைத் தொடர்ந்து ஹீரா குறிப்பிட்டிருக்கும் நடிகர் அஜித்தான் என்று பலரும் பேசினார்கள். ஆனால் அந்த வலைதளமே போலியானது; பத்ம விருது பெறப்போகும் நாளில் அஜித்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக சிலர் வேண்டுமென்றே அப்படி பரப்பியிருக்கிறார்கள் என அஜித்தின் ரசிகர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார்கள். இருப்பினும் இந்த விஷயம் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

பிஸ்மி அளித்த பேட்டி: தி ஃபைனல் கட் என்ற யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "பொதுவாக அரசு விருது என்றாலே அரசியல் விருதுதான். அவர்களுக்கு தேவையானவர்களுக்கு மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டிருப்பது உண்மையில் வரவேற்கக்கூடிய ஒன்றுதான். அதற்கு அஜித்தும் தகுதியானவர்தான். சர்வதேச அளவில் கார் ரேஸ்களில் எல்லாம் கலந்துகொண்டு வெற்றி பெறுகிறார். இந்தியாவுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார். எனவே இதனை நான் ஒரு சரியான விஷயமாகத்தான் பார்க்கிறேன்.
வெறுக்கப்பட்ட நபராக இருந்தார்: அஜித் ஒருகாலத்தில் எல்லோர் குறித்தும் கமெண்ட் அடிப்பார். சகட்டு மேனிக்கு பேசுவார். இதன் காரணமாக அவர் அதிகம் பேரால் வெறுக்கப்பட்ட நபராக இருந்தார். ஒரு பத்திரிகையாளர் அஜித்திடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரிடம் விஜய் பற்றி ஆஃப் தி ரெக்கார்டாக ஏகப்பட்ட விஷயங்களை பேசியிருக்கிறார். அதை அந்த பத்திரிகையாளர் கவர் ஸ்டோரியாகவே போட்டுவிட்டார். அதனையடுத்து அஜித்தை ரஜினி அழைத்து இந்த மாதிரியெல்லாம் இனி பேசாதீர்கள். மீடியாவோடு ரொம்பவே நெருக்கமாக இருக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்தார். அதற்கு பிறகுதான் மீடியாக்களிடமிருந்து அஜித் விலகியிருக்க ஆரம்பித்தார்.
அந்தக் காதல் கதை உண்மைதான்: அஜித் அவரது திரை வாழ்க்கையில் ஷாலினியோடு சேர்த்து மூன்று காதல்களை சந்தித்திருக்கிறார். முதலில் நடிகை சுவாதியை காதலித்தார். ஆசை படம் ஹிட்டான பிறகு சுவாதியிடமிருந்து அஜித் பிரிந்துவிட்டார். அதற்கு பிறகு ஹீராவை காதலிக்க ஆரம்பித்தார் ஏகே. ஒருகட்டத்தில் இரண்டு பேருக்கும் சில பிரச்னைகள் வந்தன. அதனால் பிரிந்தார்கள். பிறகு ஷாலினியை காதலிக்க ஆரம்பித்தார். அஜித் - ஹீரா காதல் கதையை முதன்முதலாக பத்திரிகையில் எழுதியதே நான்தான். இப்போது எனக்கு எழும் கேள்வி என்னவென்றால் இந்தக் காதல் கதை எப்போதோ நடந்தது. அஜித் இப்போது திருமணமாகி குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கிறார். இந்த சமயத்தில் இது தேவைதானா என்று தோன்றுகிறது. அதுமட்டுமின்றி அந்தப் பதிவை ஹீரா இப்போதான் போட்டாரா இல்லை அவர் எப்போதோ போட்டதை இப்போது சிலர் ட்ரெண்டாக்கியிருக்கிறார்களா என்று தெரியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











