தக் லைஃப்.. கமலுக்கும் மணிரத்னத்துக்கும் சண்டையா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே கமலுக்கும், மணிரத்னத்துக்கும் சண்டை என்று சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் காட்டுத் தீ போல் பரவியது.
கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது. இடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது. அதற்கு பதிலாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி செர்பியாவில் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து மக்களவைத் தேர்தல் நடந்ததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது.
விலகிய நடிகர்கள் மீண்டும் இணைந்தார்கள்: இதற்கிடையே படத்தில் கமிட்டாகியிருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. அதேசமயம் சிம்பு இந்தப் படத்தில் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்பட்டது. நிலைமை இப்படி இருக்க துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் மீண்டும் இணைந்திருப்பதாக இப்போது சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் ஷூட்டிங் டெல்லியில் தொடங்கியிருக்கிறது.
சண்டை: இதற்கிடையே டெல்லியில் தொடங்கிய ஷூட்டிங்கில் கமல் ஹாசன் தாமதமாகத்தான் கலந்துகொண்டார் என்றும்; அதற்கு காரணம் அவர் கதை விஷயத்தில் அதீத தலையீடு செய்வது மணிரத்னத்துக்கு பிடிக்கவில்லை; எனவே இரண்டு பேருக்கும் முட்டிக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், "கமலுக்கும் மணிரத்னத்துக்கும் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என்று வதந்தியை கிளப்பிவிட்டார்கள். ஆனால் அது உண்மையில்லை. படத்தில் ஒரு பாடலை கமலே எழுதி பாடுகிறார். அதற்கான வேலைகளில்தான் அவர் இருந்தார். ஆனால் இது தெரியாமல் சிலர் கமலுக்கும், மணிரத்னத்துக்கும் சண்டை என்று கிளப்பிவிட்டுவிட்டனர்" என்றார்.


Click it and Unblock the Notifications











