Vijay TVK: விஜய்யின் தவெக மாநாட்டிற்கு போவேன் - பிரஸ் மீட்டில் பளிச்சுனு சொன்ன முன்னணி நடிகர்
சென்னை: நடிகர் ஜீவா நடிப்பில் தற்போது பிளாக் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் வெளியாகி இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், படத்தின் காட்சிகள் மற்றும் திரையரங்குகள் தமிழ்நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் வாரத்திலேயே படம் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றுவிட்டது. இதனால், படக்குழு நேற்று அதாவது அக்டோபர் 17ஆம் தேதி வெற்றி விழாவைக் கொண்டாடியது. வெற்றி விழாவின்போதும் அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ஜீவா பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பிளாக் படம் கமர்ஷியல் எலமெண்ட் நிறைந்த படம் இல்லை. இதில் அதிரடிக் காட்சிகளோ, காமெடிக் காட்சிகளோ இல்லை. ரசிகர்கள் மிகவும் சைலண்டாக படத்தினைப் பார்த்தார்கள். படத்தின் திரைக்கதையும் அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி எங்களுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது. நான் டிஷ்யூம் படத்தில் கூட ஒரு டயலாக் பேசியிருப்பேன். அதாவது, ' நாங்க எல்லாம் கைத்தட்டலுக்கு ஏங்கற ஜாதி' என. அதுபோல இன்னும் நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கின்றது. இன்னும் நல்ல நல்ல கதைகளைத் தேர்வு செய்யவேண்டும் என்ற பொறுப்பினைக் கொடுத்துள்ளார்கள். இது போன்ற கதைகளை எனது அப்பா படம் செய்ய ஒத்துக் கொள்ளமாட்டார். காரணம் படத்தின் கதை அப்படி அமைக்கப்பட்டுள்ளதுதான்.

பிரியா பவானி சங்கர்: நடிகை பிரியா பவானி சங்கர் ஏன் பிளாக் படத்தின் விழாக்களில் பங்கேற்கவில்லை என அவரிடம்தான் கேட்கவேண்டும். அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒருவேளை அவருக்கு தேதி இல்லாமல் இருந்திருக்கலாம், சொந்த வேலைகள் எதாவது இருந்திருக்கும். அதனால் வரமுடியாமல் போயிருக்கலாம். இதே சூழல் எனக்குமே ஏற்படும். அதனை நாம் கூறமுடியாது இல்லையா என்றார்.

தியேட்டர்கள்: அதிகப்படியான தியேட்டர்களில் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் என எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு கம்மியான தியேட்டர்களே போதுமானதாக இருந்தது. படம் இப்போது மட்டும் இல்லை வேறு எப்போது ரிலீஸ் ஆகியிருந்தாலும் நாங்கள் கட்டாயம் இதே அளவிலான தியேட்டர்களுடன் தான் ரிலீஸ் செய்திருப்போம் எனவும் கூறினார்.

தவெக மாநாடு: கற்றது தமிழ் படத்தினை நீங்கள் மொக்கைப் படம் எனக் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, நான் கற்றது தமிழ் படத்தினை மொக்கைப் படம் எனக் கூறவில்லையே எனவும் பதில் அளித்தார். மேலும், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கலந்து கொள்வீர்களா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நிச்சயம் நேரம் இருந்தால் போவேன் என பதில் அளித்தார். மேலும், சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் அதில் கட்டாயம் சந்தானம் இல்லாமல் இருக்காது. படத்தின் ஒன் லைன் நல்ல படியாக அமைந்தால் கட்டாயம் சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் எனவும் பதில் அளித்தார். தவெக மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications











