Blue Sattai Maran: "லியோவுக்கு ஒரு நியாயம்... டைகர் 3க்கு ஒரு நியாயமா..?” ப்ளூ சட்டை மாறன் விளாசல்!
சென்னை: சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் காலை 7 மணிக்கு திரையிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி டைகர் 3 காலை 7 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், திருப்பூர் சுப்ரமணியனை விளாசியுள்ளார்.

அரசு அனுமதியின்றி டைகர் 3 ஸ்பெஷல் ஷோ : பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3 திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியானது. மனீஷ் ஷர்மா இயக்கத்தில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சல்மான் கானுடன் கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள டைகர் 3, தமிழ்நாட்டிலும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் காலை 7 மணிக்கு திரையிட்டுள்ளது. நாளையும் காலை 7 மணி காட்சிக்கு ஆன் லைனில் புக்கிங் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் வெளியாகும் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி இரு தினங்களுக்கு முன்பு வெளியான ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் காலை 9 மணிக்கு தான் ரிலீஸானது.
முன்னதாக விஜய்யின் லியோவுக்கும் 9 மணி சிறப்புக் காட்சிகளுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் டைகர் 3 படம் மட்டும் எப்படி காலை 7 திரையிடப்பட்டது என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, "தமிழக அரசின் அரசாணைகளை மதிக்காத திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ்.? இன்று ரிலீசாகும் சல்மான் கானின் டைகர் 3 படத்திற்கு பல்வேறு காலைக் காட்சிகள் திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன."

"தமிழ்ப் படங்களாகிய ஜப்பான், ஜிகர்தண்டா 2 படங்களுக்கு மட்டுமே காலைக் காட்சி அனுமதியை தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதுவும் காலை 9 மணி முதல் மட்டுமே. ஆனால் காலை 7 மணி முதல் ஏகப்பட்ட காட்சிகளை இந்த தியேட்டர் திரையிடுவதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளதா? இல்லாவிட்டால் அது சட்டப்படி குற்றம்தானே? இதற்கு முன்பு சன்னி தியோல் நடித்த Gadar 2 படத்திற்கு நள்ளிரவுக் காட்சிக்கான புக்கிங் பற்றிய ஆதாரத்தை வெளியிட்டு இருந்தோம். அதற்கும் அரசின் அனுமதி இல்லை."
"இனிமேல் நள்ளிரவு, அதிகாலைக் காட்சிகளை தமிழக திரையரங்குகளில் போட மாட்டோம். முதல் காட்சி காலை 9 மணிக்கு மட்டுமே. நேர்மை, நீதி, சட்டம் என்று பல்வேறு செய்தி, யூட்யூப் சேனல்களில் வீர வசனம் பேசியது யார் தெரியுமா? தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம். இப்போது மீண்டும் இந்த உறுதிமொழி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. இந்த தியேட்டருக்கு முதலாளி யார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது இவர் எப்படி எதிர்த்து பேசுவார். என்ன நடவடிக்கை எடுப்பார்?"
"அந்த சங்கத்தில், இந்த சட்ட மீறலை தட்டிக்கேட்டும் திராணி ஒருவருக்கு கூடவா இல்லை? 'போதைப் பழக்கத்தை கைவிடுங்கள், ஹெல்மட் போடுங்கள்' என மக்களுக்கு அறிவுரை சொல்லும் பெரிய ஹீரோக்களும், இயக்குநர்களும் இதைப்பற்றி எல்லாம் வாய் திறக்க வக்கற்றவர்கள். அவர்களுக்கு முதுகெலும்பும் இருப்பது மிகப்பெரிய ஆச்சர்யம். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என ஒருவரும் வாய் திறக்கப்போவதில்லை."
"தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு, அதன் மூலம் சோறு சாப்பிட்டு, நெகட்டிவ் விமர்சனம் செய்கிறாயே?' என்று ஒவ்வொரு சேனலிலும் விமர்சகர்களை திட்டி சவுண்ட் விடத்தான் லாயக்கு. அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, பிரவீன் பூந்தி, செய்யாறு ஓலா போன்ற வடை சுடும் போலி பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கர்கள், சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸர்கள் என யாரும் இதைப்பற்றி பேசியதுமில்லை. பேசப் போவதுமில்லை. திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளரும், திருச்சி தியேட்டர் ஓனருமான ஸ்ரீதர் அவர்கள் மட்டுமே நேர்மையான பேட்டிகளை தந்து வருகிறார்."
"ஆனால் சங்கத் தலைவருக்கு எதிராக அவர் எப்படி பேச முடியும்? உங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு கோரிக்கை: இனிமேல் பேட்டிகளில் நேர்மை, நீதி பற்றி தயவுசெய்து பேசாதீர்கள். தமிழக மக்கள் கைகொட்டி சிரிப்பார்கள், ஏற்கனவே சிரித்துக்கொண்டும் இருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு டிவிட்டர் பதிவில், "காலை 9 மணி முதல் மட்டுமே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என தமிழக அரசு அறிவித்தும், அதை மதிக்காமல் இன்று காலை 7 மணி முதல் பல காலைக் காட்சிகளை தனது மல்டிப்ளெக்சில் திரையிடுகிறது Sri Sakthi Cinemas, திருப்பூர். Bookmyshow தளத்தில் ஆதாரம் உள்ளது. அதை முந்தைய ட்வீட்டில் ஷேர் செய்துள்ளோம். இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் வாய் திறக்காமல் அமைதியாக இருப்பது ஏன்?"
"சங்க செயலாளர், பொருளாளர், இதர நிர்வாகிகளும் மௌனம் காப்பதற்கு காரணமென்ன? ஒருவேளை நீங்கள் எதிர்க் கட்சிகளின் சார்பாக செயல்படுவதாக எடுத்துக்கொள்ளலாமா.? அதனால் தான் திமுக அரசின் அனுமதியின்றி காலை 7 மணிக் காட்சிகளை Sri Sakthi Cinemas நிர்வாகம் திரையிட்டு கெத்து காட்டுகிறதா? அரசாணையை மீறும் இந்த தியேட்டர் நிர்வாகத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? திருப்பூர் காவல்துறை இதுகுறித்து இன்றே விசாரணை மேற்கொள்ளுமா?"
"இன்று முதல் இந்த தியேட்டரில் அரசின் உத்தரவை மீறி திரையிடப்படும் காட்சிகளை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசும், காவல்துறையும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











