Blue Sattai Maran: “கேப்டன் மில்லர் சுட்ட கதையா, சுடாத கதையா” அருண் மாதேஸ்வரனுக்கு ப்ளூ சட்டை கேள்வி
சென்னை: தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் திரைப்படம், பொங்கல் ஸ்பெஷலாக கடந்த வாரம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற கேப்டன் மில்லர், தற்போது கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளது. இதனையடுத்து இயக்குநர் அருண் மாதேஸ்வரனிடம் கேப்டன் மில்லர் சுட்ட கதையா, சுடாத கதையான என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேப்டன் மில்லர் சுட்ட கதையா, சுடாத கதையா
தனுஷ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மில்லர் திரைப்படம் ஜன.12ம் தேதி வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ரொம்பவே ஹைப் கொடுக்கப்பட்டது. இதனால் பொங்கல் ரேஸில் கேப்டன் மில்லர் தான் சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் வெளியான இரண்டே நாட்களில் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மொத்தமாக அடி வாங்கியது.

தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் என சூப்பரான ஸ்டார் வேல்யூ இருந்தும் கேப்டன் மில்லர் செல்ஃப் எடுக்கவில்லை. இந்தப் படம் இதுவரை 40 முதல் 50 கோடி ரூபாய் வரை மட்டும் வசூல் செய்திருக்கும் என சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பல திரையரங்குகளில் கேப்டன் மில்லர் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தற்போது கதை திருட்டு விவகாரத்திலும் சிக்கி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது கேப்டன் மில்லர். அதாவது இந்தப் படத்தின் கதை பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியின் பட்டத்து யானை நாவலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து இயக்குநர் கீரா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது ப்ளூ சட்டை மாறனும் தனது பங்கிற்கு தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.
கேப்டன் மில்லர் கதை திருட்டு குறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, "சாணிக் காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் என அருண் மாதேஸ்வரன் இயக்கிய மூன்றுமே மொக்கை காவியங்கள் என்பது நாம் அறிந்ததே. ஏற்கனவே வசூலில் பணால் ஆகிவிட்ட கேப்டன் மில்லர் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது."
"எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தியின் 'பட்டத்து யானை' எனும் நூலின் கதையை சுட்டு இப்படத்தை எடுத்து இருக்கிறார் அருண் என்பதே அந்த குற்றச்சாட்டு. சொன்ன பட்ஜெட்டை விட அதிக செலவு இழுத்து வைத்தார் எனும் குற்றச்சாட்டு வேறு இவர் மேல் இருக்கிறது. இது சுட்ட கதையா, சுடாத கதையா என்பதற்கு இன்னும் பதில் தராமல் இருக்கிறார் அருண்.
"வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் பாணியில் மாறுபட்ட படங்களை எடுப்பதாக நினைத்துக்கொண்டு இருப்பவர்... கடைசியில் கன்னக்கோல் வைத்தது நம்ம கடைவீதிலதானா?' என மூக்கு மேல் நாக்கை வைக்காத குறையாக பேசிக்கொள்கிறார்கள் சினிமா ரசிகர்கள்" என கடுமையாக விமர்சித்துள்ளார். கதை, திரைக்கதை, மேக்கிங் என கேப்டன் மில்லரில் எல்லாமே சொதப்பிவிட்டதாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது கதை திருட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவுக்கு நெட்டிசன்களிடம் இருந்தும் வெரைட்டியாக கமெண்ட்ஸ்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அதேநேரம் கேப்டன் மில்லர் கதை திருட்டு விவகாரம் இப்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் இந்த பிரச்சினை இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











