Blue Sattai Maran: “சென்சாருக்கு லஞ்சம்... விஷால், சமுத்திரகனியை விசாரிக்க வேண்டும்..” ப்ளூ சட்டை
சென்னை: மார்க் ஆண்டனி இந்தி வெர்ஷனுக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்க லஞ்சம் கொடுத்ததாக விஷால் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்த புகாரின் பேரில் 2 பெண்கள் உட்பட 3 தரகர்கள், பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது விஷாலின் உதவியாளர் உள்ளிட்ட சிலரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் விஷாலுடன் சமுத்திரக்கனியையும் விசாரிக்க வேண்டும் என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளார்.
விஷால், சமுத்திரகனியை விசாரிக்க வேண்டும்
விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் விஷாலுடன் எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் காமெடி படமாக உருவாகியிருந்த மார்க் ஆண்டனி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் சென்சார் சர்டிஃபிகேட் வாங்க, லஞ்சம் கொடுத்ததாக விஷால் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்தி வெர்ஷன் சென்சாருக்காக, மும்பை CBFC அலுவலகத்தில் 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அவர் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, மகாராஷ்ட்ரா முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.

விஷாலின் இந்த வீடியோ வைரலாகி வந்த போது, நடிகர் சமுத்திரகனியும் சென்சார் போர்டு மீது லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டியிருந்தார். தனது 'அப்பா' படத்திற்கு வரிவிலக்கு பெற பணம் கொடுத்ததாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனிடையே விஷால் புகார் குறித்து விசாரணையை தொடங்கிய சிபிஐ, 3 பேர் மீது வழக்குப் பதிந்தது. மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் ஆகியோர் மீதும், தணிக்கைச் சான்று அமைப்பு ஊழியர்கள் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது விஷாலின் உதவியாளரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளார்களாம். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், விஷாலிடமும் விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது, "லஞ்சம் பெறுவதற்கு இணையான குற்றம் லஞ்சம் தருவது."
"மார்க் ஆண்டனி படத்துக்காக லஞ்சம் தந்தவர்களையும், தர தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும். விஷாலையும் விசாரிக்க வேண்டும். அவர்தான் இதுபற்றி பொதுதளத்தில் எழுதினார் (ட்வீட்). 'அப்பா' படத்திற்கு வரிவிலக்கு பெற பணம் தந்தேன் என மீடியா முன்பு ஒப்புக்கொண்ட சமுத்திரக்கனியையும் உடனே விசாரிக்க வேண்டும்" என ப்ளூ சட்டை மாறன் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











