பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. நல்லா இருக்கு உங்கள் ரகசிய கூட்டு..விஜய்யை வெளுத்த பிரபலம்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சியை தொடங்கியதிலிருந்து பொது பிரச்னைகளுக்கும் பெண்கள் தொடர்பான பிரச்னைகளுக்கும் தொடர்ந்து குரலை எழுப்பிவருகிறார். அதேபோல் திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார் அவர். இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் நேற்று நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதுகுறித்தும் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே அவரது ரசிகர்கள் கோரிக்கையை வைக்க ஆரம்பித்தார்கள். அதன்படி அவரும் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கியதிலிருந்து அவரை கடுமையாக பலரும் ட்ரோல் செய்துவருகிறார்கள். ஆனால் அவரோ தன்னுடைய பாதையில் கவனத்தை வைத்து முழுமூச்சாக அரசியல் களத்தில் சுற்றி சுழன்றுவருகிறார். குறிப்பாக திமுகவை மிக கடுமையாக விமர்சித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன்: இதற்கிடையே இன்னும் ஒரு படத்தில் மட்டுமே தான் நடிப்பேன் என்றும் அறிவித்திருக்கிறார் அவர். அதற்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஹெச். வினோத் இயக்கிவருகிறார். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சமீபத்தில்தான் கொடைக்கானலில் இருக்கும் தாண்டிக்குடியில் நடந்தது. இதில் விஜய் காவல் துறை அதிகாரியாக வருகிறார் என்றும்; அவரது கேரக்டர் பெயர் தளபதி வெற்றிக்கொண்டான் என்றும் சொல்லப்படுகிறது. அவர் காவல் துறை சீருடையில் இருக்கும் புகைப்படமும் வெளியானது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டு பல பெண்களை 9 பேர் அடங்கிய கும்பல் பொள்ளாச்சியில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தும், அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தும் அராஜகம் செய்தது. அப்படி பாதிக்கப்பட்ட ஒரு பெண் காவல் துறையில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. விசாரணையில் அதிர்ச்சி தரும் விஷயமாக கிட்டத்தட்ட 100 பெண்கள்வரை அப்படி பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.
நீதிமன்றம் தீர்ப்பு: இந்த அராஜக செயலை செய்த ஒன்பது பேரில் அருளானந்தம் உள்ளிட்டோர் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிபிஐ இந்த வழக்கை விசாரித்துவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் சபரி ராஜன், அருளானந்தம் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்றும்; அவர்கள் அனைவருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
விஜய்யின் பதிவு: நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் மகிழ்ந்திருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: விஜய்யின் இந்தக் கருத்தை தொடர்ந்து பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் பதிவில், "அரை கிலோமீட்டர் நீளத்திற்கு எழுதிய ட்வீட்டில் அதிமுக அரசு என்று ஒருவார்த்தை கூட இல்லை. இதே திமுக அரசு என்றால் 'ஐயய்யோ சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை' என கொதிக்கும் வடைசட்டியில் காலை விட்டது போல குதித்திருப்பார். நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு" என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











