Blue Sattai Maran: “கூல் சுரேஷ் திரும்ப திரும்ப இதேதான் பண்றார்” புரட்டி எடுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: சிம்புவின் ஆரம்பகால படங்களில் அவருக்கு நண்பனாக நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ்.
ஒருசில படங்களில் நடித்துள்ள கூல் சுரேஷ், தற்போது சினிமா நிகழ்ச்சிகளில் ரைமிங்காக பேசி ஸ்கோர் செய்து வருகிறார்.
அதேநேரம் பல நேரங்களில் சர்ச்சையான முறையில் பேசி வாங்கிக் கட்டிக்கொள்வதும் வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில், சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கூல் சுரேஷ் நடந்துகொண்ட விதம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிம்பு ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய காலங்களில், அவரது கேங்கில் ஒருவராக வந்து பிரபலமானவர் கூல் சுரேஷ். சிம்புவின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த கூல் சுரேஷ், தற்போது சினிமா ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ரைமிங்காக பேசி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களுக்கு, கூல் சுரேஷின் ரைமிங் வசனங்கள் பப்ளிசிட்டியாக அமைந்தது.
இதனால் மீண்டும் லைம்-லைட்டில் வந்த கூல் சுரேஷை, பட இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பேச அழைக்கின்றனர். நெகட்டிவ் பப்ளிசிட்டியாக இருந்தால் போதும் என கூல் சுரேஷை அழைத்துச் சென்றால், அவரோ சர்ச்சையாக பேசி அனைவரையும் சிக்கலில் மாட்டி விடுவதையே ஃபுல்டைம் வேலையாக பார்த்து வருகிறார். இந்த வரிசையில் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் நடந்துகொண்டது, கடும் சர்ச்சையானது.
மன்சூர் அலிகான் நடித்துள்ள சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளருக்கு திடீரென மாலை போட்டு வாழ்த்துத் தெரிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் தொகுப்பாளர், மேடையிலேயே மாலையை கழட்டி வீசி எறிந்தது பரபரப்பானது. இதற்கு சினிமா பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, கூல் சுரேஷுக்கு பதிலாக மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து இன்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் கூல் சுரேஷ். அதில், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஜாலியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி நினைத்து தான் அந்த பெண்ணுக்கு மாலை போட்டுவிட்டேன். அது உண்மையாகவே மிகப் பெரிய தவறு தான். அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற தவறுகளில் ஈடுபட மாட்டேன் என பேசியிருந்தார்.

மேலும், இந்த சம்பவத்துக்கும் சரக்கு படக்குழுவினருக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. தயவுசெய்து மன்னித்துவிடுங்கள் எனக் கூறி, பத்திரிகையாளர்களிடம் தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இதற்கு ப்ளூ சட்டை மாறன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கூல் சுரேஷையும் விமர்சித்துள்ளார். கூல் சுரேஷ் தொடர்ந்து சினிமா நிகழ்ச்சிகளில் இதுபோன்று சில்லியாக நடந்துகொள்கிறார்.
எல்லாம் செய்துவிட்டு ஒவ்வொரு முறையும் மன்னிப்புக் கேட்பதும், பின்னர் மீண்டும் அதே தவறை செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். இப்படியான கூல் சுரேஷை மீடியாக்கள் புறக்கணிப்பதை விட்டுவிட்டு, அவரை ஊக்கப்படுத்தி வருவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











