Rajinikanth - ரஜினிக்கு ஆளுநர் பதவியா?..இது எதிர்பார்த்ததுதான்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிக்கு ஆளுநர் பதவியா என்ற கேள்விக்கு அவரது சகோதரர் அளித்த பதிலை வைத்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்திருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் ஜெயிலர் படம் ரிலீஸானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான அந்தப் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. இதுவரை 600 கோடி ரூபாய் உலகளவில் வசூலாகியிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும் ரஜினிக்கும், நெல்சன் திலீப்குமாருக்கும் கலாநிதி மாறன் காரையும், செக்கையும் பரிசாக கொடுத்தார்.

ரஜினியின் சந்திப்பு: இதற்கிடையே படம் ரிலீஸுக்கு ஒருநாள் முன்பு இமயமலை சென்ற ரஜினி அங்கு தனது பயணத்தை முடித்துக்கொண்டு சில சந்திப்புகளை நிகழ்த்தினார். அதன்படி ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எம்.எல்.ஏ ராஜா பையா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை சந்தித்தார். மேலும் ராமர் கோயில் கட்டுமான பணிகளையும் நேரில் சென்று பார்த்தார்.
காலில் விழுந்த ரஜினி: யோகி ஆதித்யநாத்தை சந்தித்தபோது அவரது காலில் ரஜினிகாந்த் விழுந்தார். அது பெரும் சர்ச்சையாக மாறியது. அதுகுறித்து விளக்கமளித்த ரஜினிகாந்த், "வயதில் சிறியவராக இருந்தாலும் அவர் துறவியாகவோ, சாமியாராகவோ இருந்தால் காலில் விழுவது எனது வழக்கம்" என கூறினார். அவரது விளக்கமும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.
எல்லாம் ப்ளான்: இந்த சந்திப்பை சாதாரண சந்திப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறினர். ஆனால் இந்த சந்திப்புக்கு பின்னால் ரஜினியின் பக்கா ப்ளான் இருப்பதாக ஒருதரப்பினர் கூறினர். அதாவது ஆளுநர் பதவிக்கு அடிப்போட்டுத்தான் பாஜக அரசியல்வாதிகளை மட்டும் ரஜினி சந்தித்தார். பொதுவாக சந்திக்க வேண்டுமென்றால் காங்கிராஸ்காரர்களையும் சந்தித்திருக்க வேண்டியதுதானே என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
ரஜினி சகோதரர் பேட்டி: இந்நிலையில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். பிறகு அவரிடம் ரஜினிக்கு ஆளுநர் பதவி கொடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'எல்லாம் இறைவன் கையில்தான் இருக்கிறது' என பதிலளித்தார்.
இதனையடுத்து ரஜினிகாந்த்தை சமீபகாலமாக அதிகம் விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் சத்யநாராயணாவின் பதிலை குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில், "இது எதிர்பார்த்ததுதான்.. ஆளுநர் பதவி?" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக ரஜினிகாந்த் காங்கிரஸ்காரர்களை சந்தித்தால் ரெய்டு வந்துவிடும் என்று பயந்துதான் அதை செய்யவில்லை என மாறன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











