Blue Sattai Maran Jailer Review - ஜெயிலர் படத்தை பார்த்தவங்க கோமாவுக்கு போறாங்க.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
சென்னை: Blue Sattai Maran Jailer Review (ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் விமர்சனம்) பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படத்துக்கு தனது விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. பான் இந்தியா ஸ்டார்களுடன் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்றனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினி படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து திருவிழா போல் கொண்டாடினர்.

மாஸ் ப்ளஸ் க்ளாஸ்: 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட முதல் காட்சியை பார்த்துவிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர். ஆனால் முதல் காட்சி பார்த்தவர்கள் எல்லாம் ரஜினியின் ரசிகர்கள்.அதனால் இப்படித்தான் இருக்கும் மதியத்துக்கு மேல்தான் படத்தின் உண்மையான ரிசல்ட் தெரியவரும் எனவும் திரை ஆர்வலர்கள் கூறினர்.
பாசிட்டிவ்தான்: ஆனால் இரண்டாவது, மூன்றாவது காட்சிகளின் முடிவில்கூட படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே பெரும்பாலும் வந்தன. குறிப்பாக படம் ஆக்ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்து ஃபேமிலி எண்ட்டெர்டெயினராக வந்திருக்கிறது. ரஜினியை நெல்சன் திலீப்குமார் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர்.
வசூல்: இதன் காரணமாக படத்தின் முதல்நாள் வசூல் அமோகமாக இருக்கிறது. மொத்தம் 49 கோடி ரூபாயை இந்தியாவில் ஜெயிலர் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இன்றும் வசூல் அதிகரிக்கும் என்றும், நாளை, நாளை மறுநாள் விடுமுறை என்பதால் கண்டிப்பாக படமானது நூறு கோடி ரூபாயை வசூலித்துவிடும் கணிக்கப்பட்டிருக்கிறது.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் சமீப காலமாக ரஜினியை பங்கமாக கலாய்த்துவரும் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படத்துக்கு தன்னுடைய விமர்சனத்தை வழங்கியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் விமர்சனத்தில், "டார்க் காமெடி என்றால் திரையில் தோன்றுபவர்கள் சீரியஸான நேரத்தில் காமெடி செய்வார்கள். நமக்கு சிரிப்பு வரும். ஆனால் ஜெயிலரை பார்க்கும்போது திரையில் இருப்பவர்கள் செய்யும் காமெடியை பார்த்து நாம் சீரியஸாகிவிடுகிறோம்.
கோமாவுக்கு போறாங்க: படத்துக்கு வில்லன் கேரக்டர்தான் முக்கியம். தனது இரண்டு கண்கள் போனாலும் எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்ற தொனியில் வில்லன் இருக்க வேண்டும். ஆனால் ஹீரோ வில்லனை ப்ளாக் மெயில் செய்கிறார். வில்லன் படுத்தே விட்டானாய்யா ரேஞ்சுக்கு இருக்கிறார். வில்லன் விஷயத்தில் வரும் ட்விஸ்ட்டை பார்க்கும்போது கொஞ்சம் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. அப்போதிலிருந்தாவது படத்தை டேக் ஆஃப் செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்குள் படம் பார்த்த ரசிகர்கள் எல்லாம் கோமாவுக்கு சென்றுவிட்டார்கள்.
பான் இந்தியா படமா?: பான் இந்தியா ஸ்டார்களை சின்ன சின்ன ரோல்களில் நடிக்க வைத்துவிட்டால் இது பான் இந்தியா படமாகிவிடும் என நெல்சனை யாரோ நம்ப வைத்திருக்கிறார்கள். நல்ல வேளை கேமியோ ரோல்களில் வருபவர்களின் வாயில் சிகரெட் இருப்பதால் இரண்டு வரிக்கு மேல் வசனம் பேசவில்லை. அப்படி பேசியிருந்தால் டப்பிங் பட உணர்வுதான் வந்திருக்கும். படம் எங்கெங்கோ அலைந்துகொண்டிருக்கிறது.
சன் பிக்சர்ஸுக்கு நினைத்த இயக்குநர் கிடைக்கவில்லை. கிடைத்த இயக்குநரை வைத்து தயாரித்தார்கள். நெல்சனுக்கு நினைத்த ஹீரோ கிடைக்கவில்லை கிடைத்த ஹீரோவை வைத்து இயக்கினார். நினைத்த கதையை எடுக்கவில்லை. கிடைத்த கதையை எடுத்திருக்கிறார்கள். ஆகமொத்தம் இவர்கள் நினைத்த படத்தை கொடுக்கவில்லை. கிடைத்த படத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அதனால் கிடைத்த இந்த படத்தை பார்க்கப்போனால் உங்கள் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











