AR Rahman Concert - ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்டில் பாலியல் சீண்டல்.. ஆதாரத்தை கொடுத்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: AR Rahman Concert (ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்) ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்டில் பாலியல் சீண்டல் நடந்ததாக கூறி வீடியோ ஒன்றை ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசை கச்சேரியை கடந்த பத்தாம் தேதி சென்னையில் நடத்தினார். ஏற்கனவே ஆகஸ்ட் 12ஆம் தேதி நடப்பதாக இருந்த அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதால் அதற்கு வாங்கிய டிக்கெட்டும் இதற்கு செல்லும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் புதிய டிக்கெட்டுகளும் பத்தாம் தேதி விற்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அளவுக்கதிகமான கூட்டம் வந்தது.

பெரிய சர்ச்சை: கிட்டத்தட்ட 45,000 பேர்வரை வந்ததால் பலர் நிகழ்ச்சி நடக்கும் மைதானத்துக்குள்ளேயே நுழைய முடியாமல் தவித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் இரண்டு கிலோமீட்டர் தூரம்வரை வரிசை நின்றது. எனவே அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் தள்ளுமுள்ளு உருவாகி சில பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. உச்சக்கட்டமாக சில பெண்களுக்கு அந்த நெரிசலில் பாலியல் சீண்டல் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடும் கண்டனம்: இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பலரும் தங்களது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். முறையான ஏற்பாடு செய்யவில்லை என்றால் எதற்காக இசை கச்சேரி நடத்த வேண்டும் என்றும் விமர்சித்தனர். ஆனால் இதற்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சம்பந்தம் இல்லை அவருடன் துணை நிற்கிறோம் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, இயக்குநர் பார்த்திபன், குஷ்பூ உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் கூட்டத்தில் பாலியல் சீண்டல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த சூழலில் பாதிக்கப்பட்ட பெண் பேசும் வீடியோவை ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய பெண், "பலமுறை இன்ஸ்டாகிராமில் லைவாக வீடியோவில் பேசும் ரஹ்மான் இந்த மறக்க முடியுமா கொடுமைகள் பற்றி வீடியோவில் பேசாதது ஏன்? இயற்கை உபாதை கழிக்க இடம் எங்குள்ளது, எப்படி செல்ல வேண்டுமென எவ்வித பதாகையோ, மைக் மூலமாக அறிவிப்போ இல்லை. பெண்கள் மிகவும் அவஸ்தைப்பட்டோம்.
எண்ணம் வருமா: இனி இசை நிகழ்ச்சிக்கு போகும் எண்ணம் வருமா என்று தெரியவில்லை.Refund பெறுதல் இரண்டாம் பட்சம். நாங்கள் பட்ட வலியை மறக்க இயலாது. ரஹ்மான் உண்மையாகவே அன்பை விதைப்பவர். Humanity, Accountabiliy உள்ளிட்ட உயர் பண்புகளை கொண்டவராக இருந்தால்.. இவ்விரு பெண்களையும் தொடர்பு கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும். அதற்கு நேரமில்லாத அளவு பிசியாக இருந்தால்... இப்பெண்மணி சொன்னது போல இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டரில் வீடியோ மூலம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் ப்ளூ சட்டை மாறன் பதிவு செய்திருக்கும் ட்வீட்டில், 'ரெண்டு ட்வீட் மற்றும் தி ஹிந்துவிற்கு ஒத்தை பேட்டி மட்டும் தந்தால் போதாது. இது பாதிக்கப்பட்ட பெண்கள்... ரஹ்மானிடம் நடத்தும் உரையாடல். ஆகவே பருத்தி வீரர் கார்த்தி, விருது வித்தகர் பார்த்தி இத்யாதிகள் எல்லாம் இவர்களுக்காக பேசுங்கள். இல்லாவிட்டால் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் வேலையை பாருங்கள்.
Refund, Compliment, Surprise எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் ரஹ்மான். நீங்கள் உண்மையிலேயே பெண்களை மதிப்பவராக இருந்தால்.. அவர்கள் சந்தித்த கொடுமைகளுக்கு பதில் சொல்லும் விதமாக ஒரு வீடியோ போடுங்கள். வீடியோ மூலம் உங்கள் பதிலை கேட்க விரும்புவதும் அவர்கள்தான். நியாயமான கேள்வி கேட்போரை வன்ம நக்கி, காழ்ப்புணர்வு கக்கி என்று எகத்தாளம் செய்பவர்கள்... தயவு செய்து கூப்பில் உட்காரவும். இளையராஜாவை கேள்வி கேட்டால் உபி. ரஹ்மானை கேள்வி கேட்டால் சங்கியாம். மூடிட்டு போங்கடா முந்திரி (கொட்டை) பக்கோடாக்களா" என தெரிவித்துள்ளார்.
டிக்கெட் பணம்: இதற்கிடையே டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்களுக்கு அந்த டிக்கெட் பணம் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 400 பேருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் மீதி பேருக்கு விரைவில் செட்டில் செய்யப்படும் என்றும் அவரது உதவியாளர் தெரிவித்தார். அதேபோல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஏசிடிசி நிறுவனம் கூறுகையில் இதற்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முழு பொறுப்பையும் நாங்கள் ஏற்கிறோம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











