விஜய் சேதுபதிக்கு தமிழ்நாடு அரசு விருது.. புரியாத புதிரா இருக்கே.. கலாய்த்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்
சென்னை: 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை புரியாத புதிர் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விஜய் சேதுபதிக்கு விருது வழங்கப்பட்டதை கலாய்த்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக விஜய் சேதுபதி சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ், 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக கார்த்தி, சிறந்த நடிகையாக நயன்தாரா, 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக தனுஷ், சிறந்த நடிகையாக ஜோதிகா, 2019ஆம் ஆண்டு சிறந்த நடிகராக பார்த்திபன், சிறந்த நடிகையாக மஞ்சு வாரியர், 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக ஆர்யா, சிறந்த நடிகையாக லிஜோ மோல் ஜோஸ், 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக விக்ரம் பிரபு, சிறந்த நடிகையாக சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
நன்றி தெரிவித்த தனுஷ்: பிப்ரவரி 13ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கவிருக்கிறார். விருது பெற்றவர்கள் தங்களது நன்றியை தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துவருகிறார்கள். தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "வடசென்னை திரைப்படத்திற்காக மாநில விருதை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த விருதை பெற்றுள்ள மற்ற அனைத்து விருதாளர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருந்தார்.

மாரி செல்வராஜ் ட்வீட்: அதேபோல் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் என மொத்தம் ஐந்து விருதுகளை பெற்றிருக்கும் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், "2018ஆம் ஆண்டிற்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர் என இரண்டு விருதுகளை பரியேறும்பெருமாள் திரைப்படத்திற்கும் , 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த வசனம், சிறந்த கலை, சிறந்த மூன்றாவது படம் என மூன்று விருதுகளை கர்ணன் திரைப்படத்திற்கும் வழங்கி கெளரவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்கள் நன்றிகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துகொள்கிறோம்" என தெரிவித்திருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இப்படி பலரும் தங்களது மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்தி வரும் சூழலில் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கியதை கலாய்த்து பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்திருக்கிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "புரியாத புதிரில் நடித்ததற்கு சிறந்த நடிகர்.. விருது என்பது புரியாத புதிர்" என கூறியுள்ளார். தற்போது இந்த ட்வீட் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.
பா.இரஞ்சித் ட்வீட்: முன்னதாக இயக்குநர் பா.இரஞ்சித்தும் தமிழ்நாடு அரசு வழங்கிய விருதுகள் மீது அதிருப்தி தெரிவிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா? என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











